கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் புதிய சுற்றுலா வலயம்
கொழும்பு - கொள்ளுப்பிட்டி கரையோரப் பகுதியில் புதிய சுற்றுலா வலயமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் நோக்கத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டின் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு மேலும் பல புதிய சுற்றுலா வலயங்களை உருவாக்கும் அரசின் பரந்தளவான திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
பெப்ரவரியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்
இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மாதத்தில் 277,327 பேரும், பெப்ரவரி மாதத்தில் 279,328 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கைகள் 2025 மற்றும் 2018 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை 183,979 ஆகக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
முன்னணி நாடுகள்
மேலும், ஏப்ரல் மாதத்திலும் இந்த வீழ்ச்சி தொடர்ந்துள்ள நிலையில், அந்த மாதத்தில் 117,893 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நாட்டிற்கு வந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவில் மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகை 858,527 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் முன்னணி நாடுகளாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |