சுதந்திர தின கரிநாள் பேரணியில் பதற்றம்! இடைமறித்த அதிரடிப்படை
புதிய இணைப்பு
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் பேரணியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற இடத்தை கடந்து ஆர்ப்பாட்டகாரர்கள் செல்லுகின்ற போது குறித்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது காவல்துறையினர் ஆர்ப்பாட்டகாரர்களை அடக்க முயன்ற நிலையில் இவ்வாறன நிலை ஏற்பட்டதாக ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.


இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட தாயார் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் குறித்த தாயாருக்கு அவசர உதவி வழங்கிய காவல்துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி கிளிநொச்சி - கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் - யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
நிலையான அரசியல் தீர்வு
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள - பௌத்த மயமாக்கப்படுதல், இந்தப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு என்பவற்றை வலியுறுத்தியே வடக்கு - கிழக்கில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், பொது அமைப்புகள், வணிகர் சங்கங்கள், கடற்றொழிலாளர் அமைப்புகள், சமூக நிறுவனங்கள் எனப் பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
PHOTOS - SUDARON, PRIYANGAN
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 16 மணி நேரம் முன்