உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவ தீர்மானம்
நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முன்மொழியப்பட்ட ஆணைக்குழு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படுவதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து குறித்த சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. சட்ட மூலம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களைப் பெறும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கைப் பிரஜைகளின் முறைப்பாடுகள் தொடர்பில் உண்மையை உறுதி செய்யும் வகையில் நல்லிணக்கம், இழப்பீடுகள் மற்றும் நிலையான அமைதிக்குத் தேவையான வசதிகளை வழங்குவதே முன்மொழியப்பட்ட செயல்முறையின் முக்கிய நோக்கமாகும்.
நல்லிணக்கத்தை நிலைநாட்ட
கடந்த காலங்களில் மக்கள் எதிர்கொண்ட மோதல் சூழ்நிலைகளில் இருந்து மீள்வதற்கு அவசியமான ஒரு முக்கிய அங்கமான உண்மையைத் தேடுவதற்கு ஒவ்வொரு இலங்கையருக்கும் உள்ள மறுக்க முடியாத உரிமையை அங்கீகரிக்கும் வகையில் இந்த உத்தேச ஆணைக்குழு செயற்படும்.

மேலும், இலங்கை மக்களிடையே தேசிய ஒருமைப்பாடு, சமாதானம், சட்டத்தின் ஆட்சி, சகவாழ்வு, சமத்துவம், சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் வலுப்படுத்தவும் இந்த ஆணைக்குழு செயற்படும்.
இலங்கையின் பல்லின மற்றும் பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் நிலவும் பொருத்தப்பாடின்மை மற்றும் எதிர்காலத்தில் மீண்டும் முரண்பாடுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு உறுதியுடன் செயற்படுதல் முன்மொழியப்பட்ட ஆணைக்குழுவின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) உட்பட இலங்கையின் யுத்தத்துக்குப் பிந்தைய நல்லிணக்க முயற்சிகளில் கடந்த பல ஆணைக்குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளை மீளாய்வு செய்யவும், பரிசீலிக்கவும் மற்றும் நடைமுறைப்படுத்தவும் இந்த ஆணைக்குழு செயற்படும்.
இடைக்கால நிறுவனத்தை ஸ்தாபிக்க
அரசாங்கத்தினால் 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான ஆலோசனை செயலணியின் கண்டுபிடிப்புகளையும் இந்த ஆணைக்குழு கவனத்தில் கொள்ளவுள்ளது.

உத்தேச சுயாதீன ஆணைக்குழு எந்தவித அரசியல் தலையீடு இன்றியும் பக்கச்சார்பற்றதாகவும், செயற்படுவதை உறுதிப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
உத்தேச புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் வரை, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) என்ற இடைக்கால நிறுவனத்தை ஸ்தாபிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம், இந்த உத்தேச ஆணைக்குழுவிற்குத் தேவையான சட்ட மற்றும் கொள்கைக் கட்டமைப்பு, செயற்பாட்டு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்க ஏற்கனவே செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்