ரணிலுக்கு வலுக்கும் ஆதரவு! - அடுத்தடுத்து அறிவிக்கும் கட்சிகள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய 10 கட்சிகளின் குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த குழு எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்காது, ஆனால் மக்களின் பிரச்சினைகளை விவாதிப்பதற்கும் அவற்றுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் பிரதமரால் முன்மொழியப்பட்ட 15 குழுக்களில் ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நெருக்கடிக்கு தீர்வு காண அனைவரும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2022 டிசம்பர் வரையிலான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் கம்மன்பில தெரிவித்தார்.
இதேவேளை, சிறிலங்கா சுகந்திர கட்சியும் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக நேற்று அறிவித்திருந்தது.
மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தது.