மோடி - நெதன்யாகு சந்திப்பு: மத்திய கிழக்கில் இந்தியாவின் புதிய அரசியல் வியூகம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 25ஆம் திகதி இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தநிலையில், இந்தியா - இஸ்ரேல் இடையே இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
தளவாட உற்பத்தி
இந்தப் பயணத்தை முன்னிட்டு இஸ்ரேலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில், இரு நாட்டு இராணுவ அமைச்சகங்கள் மற்றும் இராணுவ உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இதில் 30 இந்திய நிறுவனங்களும் 26 இஸ்ரேலிய இராணுவ நிறுவனங்களும் பங்கேற்று, தங்களுக்குள் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி சார்ந்து ஒத்துழைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான இராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களை ஒன்றிணைப்பதும், இந்தியாவின் இராணுவக் கொள்முதல் நடைமுறைகளை இஸ்ரேலிய நிறுவனங்கள் புரிந்துகொள்வதும் இந்த ஒப்பந்தங்களின் முக்கிய நோக்கமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
நெருக்கடியான காலங்களில் ஒருவருக்கொருவர் துணையாக நின்ற இரு நாடுகளின் இராணுவத் தொழில்துறையும், இனிவரும் காலங்களில் மேலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சந்திப்பு வலியுறுத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |