அத்துமீறும் கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்தாத இந்தியா! எழுந்துள்ள குற்றச்சாட்டு
இந்திய அரசு தமது மீனவர்களை எல்லை தாண்டாது இருக்க எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று(05.01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய மீனவர் விடையங்கள் தொடர்பாகவும் அவர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாகவும், நீண்ட காலமாக நாங்கள் அவர்களின் அத்து மீறிய வருகை தடுப்பதற்காக போராட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றோம்.

பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறோம்.கட்டுப்பாட்டு விடயங்களில் அரசுக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளோம்.ஆனால் இன்று வரை அந்த செயல்பாடு தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த நினைத்தாலும், மறு புறம் தமிழ்நாடு அரசானது ஒத்துழைப்பை வழங்குவதில்லை.
தமிழக முதலமைச்சர் நடவடிக்கை
அண்மையில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது தமிழக முதலமைச்சர் மத்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்திருந்தார். அவர் எதிர்கால அரசியலை மையமாக வைத்து இந்த ஆண்டில் வரக்கூடிய தமிழ் நாட்டின் அரசை மையப் படுத்தியதாக அவரது செயற்பாடுகள் இருக்கிறது.
ஆனால் ஒரு தரம் கூட அவர் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செல்வதை தடுப்பதற்கான எந்த அறிவிப்புகளையும் கொடுத்ததாக இல்லை.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |