இலங்கை வரவுள்ள இந்தியாவின் விசேட குழு
இலங்கையில் மீட்கப்படாத இந்திய மீன்பிடிப்படகுகளை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழகத்திலிருந்து விசேட குழுவொன்று இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
கடந்த நாட்களில் இலங்கையில் ஏலமிடப்பட்ட இந்திய மீன்பிடிப்படகுகள் தொடர்பில் வெளியான செய்திகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் அவ்வாறானதொரு பின்னணியில்,
இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு காணப்படுவது குறித்து வலியுறுத்திக்கூறுவதாகவும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் இலங்கையில் மீட்கப்படாத இந்திய மீன்பிடிப்படகுகளை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவின் தமிழகத்திலிருந்து குழுவொன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளதாகவும் அந்தக் குழுவின் வருகைக்கான அனுமதி இலங்கை அரசாங்கத்திடமிருந்து உயர்ஸ்தானிகரகத்தினால் பெறப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.