மீண்டும் நெருக்கடியில் சிறிலங்கா - உடன்பாட்டுக்கு வராத இந்தியா; சீனாவின் உத்தரவாதம்!
இலங்கைக்கு, பல மாத காலத்திற்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை உறுதியாகியுள்ள நிலையிலேயே ஒரு பில்லியன் டொலர் இந்தியக் கடன் வரியை நீடிப்பதற்காக சிறிலங்கா இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இந்தியா வழங்கிய 01 பில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
கால நீடிப்பு பேச்சுவார்த்தை
குறித்த நிதியுதவியில் சுமார் 300 மில்லியன் டொலர்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை 6-12 மாதங்களுக்கு நீடிக்க சிறிலங்கா அரசாங்கம் விரும்புவதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இதுவரை பெறப்பட்ட கடன் வசதியில், மூன்றில் இரண்டு பங்கை மருந்து மற்றும் உணவுக்காக இலங்கை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் இறக்குமதிக்காக வழங்கப்பட்ட இந்த கடன் உதவி எதிர்வரும் 17ம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பொருளாதாரம் முன்னேற்றம், அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பிற்கு மத்தியில் இந்த கால நீடிப்பு பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
உடன்பாட்டை எட்டாத இந்தியா
எவ்வாறாயினும் இந்தியாவிடம் இருந்து எந்தவித உடன்பாடும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் நிதி அமைச்சு வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கான சீனாவின் நிதி உத்தரவாதத்தை நேற்று சிறிலங்கா பெற்றுக் கொண்ட நிலையில், இந்த மாத இறுதிக்குள் கடனுதவியையும் பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
