அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் நியாயம் கோருவது நியாயமற்றது! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்களை, கைது செய்யப்பட்ட பின்னர் தங்களுக்கு நியாயம் கோரிப் போராடுவது எந்த விதத்திலும் நியாயமற்றது என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று சனிக்கிழமை (21.02.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
47 கடற்றொழிலாளர்கள்
“சமீபத்தில் காரைக்கால், பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 47 கடற்றொழிலாளர்களும் அவர்களது 6 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான படகுகள் எல்லை தாண்டி வரும் நிலையில், ஓரிரு படகுகள் மட்டுமே கைது செய்யப்படுவது எமது நீண்டகாலப் பிரச்சினைக்கு ஒரு சிறிய தீர்வாகவே அமைகிறது.

இது குறித்து அரசாங்கத்திற்கு நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறோம். இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே தமிழக கடற்றொழிலாளர்கள் இக்குற்றச்செயலைச் செய்கிறார்கள்.
ஒரு நாட்டின் இறையாண்மையையும் எல்லையையும் மீறுகிறோம் என்ற குற்ற உணர்ச்சி கூட அவர்களுக்கு இல்லை.
வடபகுதி தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், எமது கடல் வளங்களைச் சூறையாடி, கடற்றொழிலாளர்கள் உபகரணங்களையும் அவர்கள் சேதப்படுத்துகிறார்கள்.
குற்றச்செயலில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் படகுகளை விடுவிக்கக் கோரியும் விடுதலை செய்யக் கோரியும் தமிழகத்தில் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களை நடத்துவது வேடிக்கையானது.
தவறு செய்துவிட்டு அதை நியாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை“ என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |