பிரித்தானியாவில் உச்சம் தொட்ட பணவீக்கம் - எகிறும் விலைவாசி!
பிரித்தானியாவில் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒக்டோபர் மாதம் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 11.1% என இருந்துள்ளதாகவும், இது கடந்த 41 ஆண்டுகளில் மிக அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் 10.7% என எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த ஓராண்டில் எரிவாயு கட்டணங்கள் 30% அளவு அதிகரித்துள்ளதாகவும், மின் கட்டணம் 66% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் விலைவாசி உயர்வு 14.5% என இருந்த நிலையில், ஒக்டோபரில் அது 16.2% என அதிகரித்துள்ளது.
நெருக்கடிக்குள் பிரித்தானிய மக்கள்
பணவீக்கம் அதிகரிப்பால் மக்கள் மீண்டும் நெருக்கடிக்கு தள்ளப்படுவதுடன், எரிசக்தி கட்டணங்கள், பெட்ரோல் விலை, மளிகை செலவும் அதிகரிக்கும் என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், அதிகரித்து வரும் பணவீக்கம், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி, உணவு, பெட்ரோல் போன்ற அன்றாடப் பொருட்களின் விலை தற்போதும் அதிகமாகவே இருக்கும்.
தனிப்பட்ட செலவுகள் என்று வரும்போது உணவு, எரிசக்தி, வீட்டுக்கான செலவுகள் மற்றும் எரிபொருளுக்கு என குடும்பங்கள் இனி அதிக தொகை செலவிட வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.