அரிசி, சீனி இறக்குமதி குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்
இலங்கையில் இறக்குமதி வரி அதிகரிப்பதற்கு முன்னர் 25 சதத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனி தொகையினை இன்று (21) முதல் அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், குறித்த சீனி தொகையை, சதொச விற்பனையகங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பல்பொருள் அங்காடிகள் ஊடாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
275 ரூபாவுக்கு விற்பனை
அத்துடன் ஒரு கிலோகிராம் சீனி 275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. சீனிக்கான இறக்குமதி வரியானது 25 சதமாக காணப்பட்ட நிலையில், அதனை 50 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.

எனினும், சில நிறுவனங்கள் வரியை அதிகரிக்கும் தீர்மானத்தை முன்கூட்டியே அறிந்து பெருமளவில் சீனியை இறக்குமதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரிசியை இறக்குமதி செய்வதற்கு
டிசம்பரில் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அடுத்த சில நாட்களில் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை கீரி சம்பா மற்றும் சம்பாவிற்கு பதிலாக மாற்று அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதன் மூலம் விலையைக் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் தொகையை அதிகரிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விலையேற்றம் நீண்டகாலமாக பாரிய ஆலை உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான நிரந்தர தீர்வை வழங்குவது தொடர்பில் நேற்று (20) அமைச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்