சமுகவலைத்தளம் தொடர்பில் கோட்டாபய வெளியிட்ட தகவல்
சமுக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி பரப்பப்படும் போலி தகவல்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி கண்டி – மீமுரே பகுதியிலுள்ள இயற்கை வளங்களை தான் அழிப்பதாக சமூக வலைத்தளங்கள் தவறான தகவல்களை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மீமுரே பகுதியில் இன்று மக்களை சந்தித்து, உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ”நான் மீமுரே பகுதியிலுள்ள இயற்கை சூழலை அழிப்பதாக சமுக வலைத்தளங்களில் கூறப்படுகின்றது. அது தவறான கருத்தாகும். இந்த ஊர், அழகான, பழமைத்துவம் வாய்ந்த கிராமமாகும்.
இந்த கிராமத்தின் அழகைப் போன்று, மக்களும் அழகாக வேண்டும். மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்குடனேயே நான் கிராமங்களுக்கு மக்களை சந்திக்க வருகின்றேன். சமுக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது” என ஜனாதிபதி கூறினார்.
இதேவேளை, மிக நீண்ட காலமாக போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்த மீமுரே மக்களின் போக்குவரத்து வசதிகளை இலகுப்படுத்தும் நோக்குடன், புதிய பஸ் சேவையொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆரம்பித்து வைத்துள்ளார்.