காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் கவனம் பெற்ற ஆடைகளும் - கைக்கடிகாரங்களும்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நினைவாக குடும்பத்தினரால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆடைகள், கைக்கடிகாரங்கள், அவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்கள் மற்றும் சம்பவங்களுடன் தொடர்புடைய வரலாற்று ஆவணங்கள் என்பன இன்றைய போராட்டத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளன.
குறித்த வரலாற்று ஆவணங்கள் அடங்கிய உணர்வுபூர்வமான நினைவுப் பொருட்காட்சியும் மாநாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான நீள் பயணம் எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு இன்று (30.08.2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
இந்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. மாநாட்டு அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஆரம்பமாகும் கவனயீர்ப்புப் பேரணி தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்த பின்னர் மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள், மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் இந்த சர்வதேச மாநாடு முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





