வடக்கு - கிழக்கு மக்கள் எழுச்சி: சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி பாரிய போராட்டம்!
வடக்கு - கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி எதிர்வரும் சனிக்கிழமை (26) வடக்கு கிழக்கு தழுவிய பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் சனிக்கிழமை (26) காலை 10.00 மணியளவில் முனெடுக்கப்படவுள்ள குறித்த போராட்டமானது யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழி பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையிலும், வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலும், மன்னாரில் நகர்ப்பகுதியிலும், அம்பாறையில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில் காந்திப் பூங்கா பகுதியிலும், திருகோணமலையில் சிவன்கோவில் பகுதியிலும் நடாத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போராட்டம் தொடர்பாக வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள்
இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் மேற்கொள்ளப் படுவதற்கு மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தமிழ் மக்களாகிய நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
குறிப்பாக இலங்கை தொடர்பான விடயம் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டு காலம் தோறும் புதுப் புது தீர்மானங்கள் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டே செல்கிறது.
இற்றைவரை இத்தீர்மானங்கள் ஊடாக குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைத்ததில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அவதானிப்பதற்காக அண்மையில் இலங்கைக்கு வருகைதந்த ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரால் அவர்களின் வருகை பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எமது தமிழ் மக்களின் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கக் கூடிய ஆரோக்கியமான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதை இட்டு வருத்தப்படுகிறோம்.
அத்துடன் அண்மையில் ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியால் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய ஊடக நேர்காணல்கூட எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்குரிய பொறிமுறையாக அமையாத நிலையை நாங்கள் ஊடக செய்திகள் ஊடாக பார்க்கிறோம்.
இலங்கை அரசின் உள்ளக பொறிமுறை
இலங்கை அரசின் உள்ளக பொறிமுறை ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அமையப் போவதில்லை. மாறாக சர்வதேச பொறிமுறைகள் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதனை வலியுத்தி பல தடவைகள் இலங்கைக்கு உள்ளேயும், சர்வதேசத்திலும் கோரி வருகின்றோம்.
இந்நிலையில் ஐ.நா இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளக பொறி முறைகள் ஊடகவே தீர்வினை மேற்கொள்ள வேண்டும் எனும் கருத்தினை தங்களது அறிக்கைகளிலும், ஊடக நேர் காணல்களிலும் குறிப்பிடுவதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான பிரச்சினைக்குரிய தீர்வு உள்நாட்டு பொறிமுறையை கடந்து சர்வதேச நீதிப் பொறி முறையின் ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்தி எதிர்வரும் ஜுலை 26 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாகவும் இதில் பாதிக்கப்பட்ட மக்களுடைய பங்களிப்பினையும் கோருகிரோம்” குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

