இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டுபிடிக்க விசாரணை
இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், பிறந்த தினம், தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், நாடாளுமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பதவி நீக்கும் அதிகாரம்
இதனிடையே இரட்டை குடியுரிமையை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற செயற்பாடுகள் ஊடாக மாத்திரமே அதனை மேற்கொள்ள முடியும் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
இரட்டை குடியுரிமை பெற்ற நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்ற சரத்து அடங்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.