பலாலி வைத்தியசாலை காணியை விடுவிக்க முடியாது! பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்
பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணியை இராணுவ பராமரிப்பில் இருந்து விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பலாலி பகுதி அதி அவதானமிக்க பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட்டுன்னதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்ட அவர்,
இழப்பீடு வழங்க நடவடிக்கை
“இந்த வலயத்துக்குள் உள்ள 1661 ஏக்கர் காணியை சட்டத்தின் பிரகாரம் இராணுவத்துக்கு உரித்தாக்குவதற்கும், காணி உரிமையாளர்களுக்கு காணி அமைச்சின் ஊடாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அவசியமற்ற காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றன. 2009 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 64,663 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 692 ஏக்கர் காணிகளை விடுவித்தோம். எதிர்வரும் ஓரிரு மாத காலப்பகுதியில் 243 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தத்தவில்லை. அத்தியாவசிய தேவை மற்றும் பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் இந்த காணிகள் பயன்படுத்தப்படுகின்றன. பலாலி விமான நிலையம் 774.98 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பயிர்ச்செய்கையில் இராணுவத்தினர்
எதிர்காலத்தில் விமான நிலைய அபிவிருத்தி பணிகளுக்காக மேலதிகமாக காணிகள் தேவைப்படும் என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபையானது விமான படை ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது. காணி அமைச்சு, நில அளவைத் திணைக்களம், முப்படை மற்றும் பிரதேச செயலக பிரிவுகளை ஒன்றிணைந்து பொது கொள்கை அடிப்படையில் முரண்பாடற்ற வகையில் இந்த கோரிக்கைக்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

இந்த பகுதியில் இராணுவத்தினர் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. தமது சுய தேவைக்காகவே பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இது வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல, பலாலி இராணுவ வைத்தியசாலை கட்டடத்தை புனரமைக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.
இந்த வைத்தியசாலை 27.9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலை புனரமைப்புக்கு 99.3 மில்லியன் ரூபா மதிப்படப்பட்டு 55 மில்லியன் ரூபா இதுவரையில் செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 42.11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முப்படையின் பயன்பாட்டில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காணிகளை தற்போது விடுவிப்பதற்கான இயலுமை கிடையாது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |