சஜித்துக்கும் மறைமுகமாக வழங்கப்பட்ட போதைப்பொருள் பணம்! ஆளும் தரப்பு பகிரங்கம்
பாதாளக் குழுக்களிடமிருந்து பெற்ற இலஞ்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 1 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஊழல் மோசடியில் இதுவரை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனதான் முன்னிலையில் இருந்தது என்றும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி தற்போது பின்தள்ளியுள்ளது என்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன முன்வைத்த கருத்துக்களில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நாடளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கோபமடைந்த ஹர்ஷ டி சில்வா
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வத்தளை பிரதேச சபை வேட்பாளராகப் போட்டியிட்ட யோஹான் விக்ரமசிங்க தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராக உள்ளார்.

இவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யபட்டுள்ளார். இதுவரை காலமும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தான் பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் நபர்களுடன் தொடர்புக் கொண்டு முன்னிலையில் இருந்தது, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தற்போது அந்த கட்சியை பின்தள்ளியுள்ளது.
எதிர்க்கட்சியில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடளுமன்ற உறுப்பினர்கள் இந்த போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை, எனவே நான் இப்போது கூறியதைக் கேட்டு நாடளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஏமாற்றமடைவதும் கோபமடைவதும் நியாயமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
நான் எந்தவொரு உறுப்பினரின் பெயரையும் குறிப்பிடவில்லை. எனது கூற்றைக் கேட்டு கோபமடைந்த ஹர்ஷ டி சில்வா போன்ற ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள், குற்றம் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.
நாட்டில் நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான போராட்டத்தை, எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் எமது அரசாங்கம் பின்வாங்காது.'' என கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |