கைதான டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரை இன்று (28) பிற்பகல் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்ட அவர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் தொடர்பில் குறித்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
விசாரணை
2001 ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019 ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது தொடர்பில் தெளிவுபடுத்தத் தவறியமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், தற்போது 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்படும் நிலையில், இன்று (28.12.2025) கம்பஹா நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

குருதியால் நனைந்த ஈழ நாட்காட்டியில் குமாரபுரம் படுகொலையின் நினைவுகள்… 22 மணி நேரம் முன்