குமரன் பத்மநாதனிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் எங்கே.! சரத் பொன்சேகா வாக்குமூலம்
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச நிதிப் பொறுப்பாளராக இருந்த 'கே.பி.' என அறியப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான தங்கத்தின் கதி குறித்து அதிரடி விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த உயர்மட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் இராணுவத் தளபதியும் ஃபீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த 2009 மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் தலைவராக கே.பி. உருவெடுத்ததாக தகவல்கள் வெளியாகின.
கே.பியின் கைது
எனினும், அதே ஆண்டு ஓகஸ்ட் மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் வைத்து இலங்கை உளவுத்துறை மற்றும் சர்வதேச பாதுகாப்புப் படைகளின் கூட்டு நடவடிக்கையின் மூலம் அவர் கைது செய்யப்பட்டு, இரகசியமாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டார்.

அதன் பின்னர் அவர் அரசாங்கப் பாதுகாப்பில் வைக்கப்பட்டு, சமூக சேவை மற்றும் அரசியல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கே.பி. கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்த பல டன் தங்கம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்களுக்குப் பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.
பொன்சேகாவின் வாக்குமூலம்
இது குறித்து ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பொன்சேகா, “2009-ல் கே.பி. கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்த தங்கம் அரசாங்கத்தாலும் பாதுகாப்பு அதிகாரிகளாலும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து எனக்கு என்ன தெரியும் என்று கேட்பதற்கே நான் அழைக்கப்பட்டேன்.

ஆனால், கே.பி. கைது செய்யப்பட்ட அந்தச் சமயத்தில் நான் இராணுவத் தளபதியாகப் பணியாற்றவில்லை, மாறாக, பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதியாகவே பதவி வகித்தேன். எனவே, அவரிடமிருந்து ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தால், அது குறித்த விவரங்கள் எனக்குத் தெரியாது.
அதே ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி நான் அந்தப் பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டேன் என்ற விபரத்தையே ஆணைக்குழுவிடம் விளக்கியுள்ளேன்.” என்றார்.
இதன்படி, தனது பதவிக்காலத்தில் கே.பி. தொடர்பான விவகாரங்களில் தமக்கு எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், போருக்குப் பிந்தைய காலத்தில் கைப்பற்றப்பட்ட இந்த சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, இந்தத் தங்க இருப்புக்கள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்பது குறித்த விசாரணையை ஆணைக்குழு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |