ஐபிஎல்லில் இந்த ஆண்டு புதிய சாதனை படைத்த ஆர்சிபி..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
ஆட்டத்தின் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்ப ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் ஃபாப் டு பிளெசிஸ் அதிரடியாக ஆடினர்.
விராட் கோலி 18 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஃபாப் டு பிளெசிஸ் 44 பந்துகளில் 55 ஓட்டங்களை குவித்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிலென் மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களை விளாசி 54 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது.
ராஜஸ்தான் அணி சார்பில் ஆடம் சாம்பா, கேஎம் ஆசிஃப் தலா இரண்டு விக்கெட்களையும், சந்தீப் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் டக் அவுட் ஆகினர். பெங்களூரு சார்பில் சிறப்பாக பந்துவீசிய பர்னெல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மைக்கல் பிரேஸ்வெல், கான் ஷர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அபார வெற்றி
கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இந்த நிலையில் பத்து ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 59 ஓட்டங்களை மட்டுமே ராஜஸ்தான் அணி பெற்றது. பெங்களூரு அணி 112 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
