எவ்வித தொடர்பும் இல்லை - அடியோடு நிராகரித்தார் மஹிந்தவின் மகன்
பிரபல சிங்கள பாடகரான இராஜ் வீரரத்னவை தாம் தாக்கியதாக வெளியான செய்திகளில் எந்தவொரு உண்மையும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமான யோஷித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைச் சபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து பாடகர் இராஜ் வீரரத்ன விலகியமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைச் சபையின் பணிப்பாளர் பதவியில் கடந்த ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட பிரபல்யமான பாடகர் இராஜ் வீரரத்ன, அதிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
தவிர்க்க முடியாத பணிகள் காரணமாக தாம் குறித்த பதவியில் இருந்து விலகுவதாக அவர் அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித்த ராஜபக்ஷ, இராஜின் கன்னத்திற்கு அறைந்ததன் காரணமாகவே அவர் பதவி விலகியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.
இராஜ்சை தாம் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் அடிப்படை அற்றது எனவும் யோசித்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இராஜ்சை சில நாட்களுக்கு முன்னர் விழா ஒன்றிலேயே தாம் சந்தித்ததாகவும் அதன் பின்னர் அவருடன் எந்தவொரு தொடர்பையும் தாம் பேணவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பாடகர் இராஜ் வீரரத்ன, தேசிய இளைஞர் சேவைச் சபையின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.