ஈரான் - இஸ்ரேல் போர் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இன்று (13) அதிகாலையில் ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது குறித்து இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அமைதியின்மை காரணமாக, விமானப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதனால் இஸ்ரேலுக்கு வரும் மற்றும் புறப்படும் இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் விமானப் பயணங்களை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், விரோத தரப்பினரிடமிருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பான வீடுகளுக்கு அருகில் இருக்கவும் தூதரகம் அறிவுறுத்துகிறது.
இஸ்ரேலும் அனைவரையும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளது.
இலங்கையர்கள் எப்போதும் குடிநீரையும் உலர் உணவையும் தங்களிடம் வைத்திருக்குமாறும், தூதரக அதிகாரிகளை 24 மணி நேரமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்” எனலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
