ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் முக்கிய நிபந்தனை
ஈரானின் கடற்படை முற்றுகையை நீக்குதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என அந்நாட்டின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு இன்று அவர் வழங்கிய முக்கிய செய்தியில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு தரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்காவின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் வரை நீரிணை திறக்கப்படாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
ஈரான் - அமெரிக்க போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்டு, பின்னர் முறிந்துபோன நிலையில் அதில் சேர்க்கப்பட்டிருந்த கோரிக்கைகளில், முற்றுகையை நீக்குதல், எண்ணெய் மீதான தடைகளை நீக்குதல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஈரானின் சொத்துக்களை முடக்குவதை விடுவித்தல் ஆகியவற்றை மீண்டும் காலிபாஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் மீது அமெரிக்க - இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பெப்ரவரி 28 அன்று போர் மூண்டது, இது பிராந்தியம் முழுவதும் ஒரு மோதலைத் தூண்டியது.
ஏப்ரல் 8 முதல் மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர முயற்சிகள் கடுமையான குண்டுவீச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தபோதிலும், குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவ்வப்போது மோதல்கள் நீடித்து வருகின்றன.
போர் தொடங்கியதிலிருந்து, உலகளாவிய முக்கிய எரிசக்திப் போக்குவரத்து வழித்தடமான அந்த நீர்வழிப்பாதையை ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால், கப்பல்கள் அனுமதி பெறவும், போக்குவரத்துச் சேவைக் கட்டணங்களைச் செலுத்தவும் வேண்டியுள்ளது.
இந்த நடவடிக்கையை அமெரிக்காவுடன் பல பிராந்திய நாடுகளும் எதிர்த்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |