தொடருந்து தடம் மீதான தாக்குதல் எச்சரிக்கை...! யுனெஸ்கோவிற்கு ஈரானின் அவசர கோரிக்கை
ஈரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருந்து கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற இஸ்ரேலின் அச்சுறுத்தலைக் கண்டிக்குமாறு கோரி கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
ஈரானின் கலாச்சார பாரம்பரியத் துறை அமைச்சர், யுனெஸ்கோ (UNESCO) தலைமை இயக்குநருக்கு இந்த அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) ஈரானிய குடிமக்களைத் தொடருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ள நிலையில் இந்த அச்சுறுத்தலானது மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியத்தின் மீதான நேரடித் தாக்குதல் என ஈரான் வர்ணித்துள்ளது.
பாரம்பரியச் சின்னம்
வடகிழக்கில் உள்ள காஸ்பியன் கடலையும் தென்மேற்கில் உள்ள பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் 1,394 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ஈரானிய தொடருந்து, கடந்த 2021 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பிரம்மாண்ட அளவு, செங்குத்தான மலைப்பாதைகள் மற்றும் சவாலான பொறியியல் நுணுக்கங்களுக்காகச் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்தத் தடம், ஈரானின் நவீனமயமாக்கலின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

இந்தநிலையில், யுனெஸ்கோவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இஸ்ரேலின் இத்தகைய இராணுவ அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வகையில் சர்வதேச அமைப்பு உடனடியாகத் தெளிவான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒரு சிவிலியன் உள்கட்டமைப்பை இலக்கு வைப்பது சர்வதேச கலாச்சாரப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |