ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
மனித சமூகத்தின் உணர்வுகள், போராட்டங்கள், நினைவுகள், எதிர்ப்புகள் ஆகியவற்றை கலை வடிவில் வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த ஊடகமே நாடகம்.
குறிப்பாக ஈழத் தமிழர் வரலாற்றில், நாடகம் ஒரு பொழுதுபோக்கு வடிவமாக மட்டுமின்றி, அரசியல் உணர்வுகளையும், சமூக மாற்றத்தையும் உருவாக்கிய போராட்ட கருவியாகவும் கையாளப்பட்டுள்ளது.
மார்ச் 26, இன்று உலக நாடக தினமாகும். இன்றைய நாளில் ஈழத் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்துடன் பின்னிப்பிணைந்து, எழுச்சியின்போது மகிழ்த்துவித்து, வீழ்ச்சியின்போது கைகொடுத்த எளிய கலை வடிவமான நாடகம் குறித்து சிந்திப்பதும் பேசுவதும் அவசியமானதொரு அறிவூட்டலாகும்.
ஈழமண்ணில் கூத்து…
ஈழத்தில் நாடகக் கலைக்கான அடிப்படைகள் பாரம்பரிய மக்கள் கலை வடிவங்களில் காணப்படுகின்றன. ஈழமண்ணில் பன்னெடுங்காலமாக கூத்துக்கலை பயிலப்பட்டு வந்துள்ளது.
கூத்து தமிழரின் ஆதிவடிவம். கூத்து, வீதிநாடகம், கிராமிய அரங்கேற்றங்கள் போன்றவை வாழ்வியல் கதைகளை எளிமையாக மக்களிடம் கொண்டு சென்றன. இவ்வகை கலைகள் பின்னர் நவீன நாடக வடிவங்களாக மாறி, கல்வியறிவு பெற்ற இளைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பங்களிப்பால் புதிய பரிமாணத்தை அடைந்தன.

20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, சமூக அநீதிகள், மொழி உரிமைகள், அரசியல் ஒடுக்குமுறைகள் போன்றவை நாடகங்களின் புதிய பேசுபொருள்கள் ஆயின.
இலங்கையில் தமிழ் நாடக வளர்ச்சியில் பல கலைஞர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். குறிப்பாக ஈழ நாடகத்துறையின் தந்தையர்கள் என மதிக்கப்படும் குழந்தை மா. சண்முகலிங்கம் மற்றும் சி. மௌனகுரு போன்றவர்களின் படைப்புகள் இன மற்றும் சமூக உணர்வையும் வரலாற்று மீள் நினைவுகளுடன் பாரம்பரிய கலையுணர்வையும் ஏற்படுத்தின.
இவர்களின் நாடகங்கள் மனித உரிமை மீறல்கள், அடக்குமுறை, இன வேறுபாடு ஆகியவற்றை சாடியதோடு, தமிழர் அடையாள அரசியலையும் வலுப்படுத்தின.
ஈழத்தின் நாடகத் தந்தையர்
ஈழத் தமிழ் நாடக உலகில் தனித்துவமான குரலாக விளங்கிய குழந்தை மா. சண்முகலிங்கம், சமூக உண்மைகளை நேரடியாகவும் ஆழமாகவும் மேடையில் பிரதிபலித்த முன்னணி நாடகாசிரியரும் இயக்குநரும் ஆவார்.
அவரது படைப்புகள் மனித வாழ்க்கையின் முரண்பாடுகள், போரால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் உளவியல் நிலைகள், அடக்குமுறை மற்றும் அநீதி ஆகியவற்றை வெளிச்சமிட்டுக் காட்டின. இவர் எழுதி இயக்கிய மண்சுமந்த மேனியர் ஈழ விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தியது எனலாம்.

யாழ்ப்பாண கிராமிய அனுபவங்களையும் நவீன அரசியல் உணர்வுகளையும் இணைத்த அவரது நாடக மொழி, பார்வையாளர்களிடம் தீவிர சிந்தனையைத் தூண்டியது. கல்வி மற்றும் கலைச் செயற்பாடுகள் வழியாக இளைஞர்களை நாடகத்துடன் இணைத்த அவர், ஈழ நாடக வளர்ச்சிக்கு நிலையான அடித்தளத்தை அமைத்தவர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.
ஈழத் தமிழ் நாடக உலகில் சோதனை முயற்சிகளாலும் உடற்கலை அடிப்படையிலான அரங்கேற்றங்களாலும் தனித்துவம் பெற்றவர் மௌனகுரு. அவரது நாடகப் பயணம் பாரம்பரியக் கூத்து வடிவங்களையும் நவீன அரங்கேற்ற மொழிகளையும் இணைக்கும் முயற்சியாக அமைந்தது.
குறிப்பாக அவரது “இராவநேசன்” நாடகம், புராணக் கதாபாத்திரமான இராவணனை புதிய பார்வையில் மீள்படைத்ததன் மூலம் குறிப்பிடத்தக்கது. இந்த நாடகம் அதிகாரம், அடையாளம், நீதியியல் போன்ற சிக்கலான கருத்துகளை உடல் மொழி, இசை, அமைதி ஆகிய கலைச் சின்னங்களின் வழியே வெளிப்படுத்தியது.
மரபு கதையை அரசியல் மற்றும் சமூகப் பொருளோடு இணைத்து சிந்திக்கத் தூண்டிய இந்நாடகம், ஈழத் தமிழ் அரங்கில் புதிய கலைப்பாதையைத் திறந்த முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது.
போர்க்கால அரங்கு
விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த காலத்தில், நாடகம் ஒரு எதிர்ப்பு மொழியாக மாறியது. போரின் மத்தியில் வாழ்ந்த மக்களின் துயரம், இடம்பெயர்வு, உயிரிழப்புகள், எதிர்கால நம்பிக்கைகள் ஆகியவை நாடகங்களில் பிரதிபலித்தன.
பல நாடகக் குழுக்கள் அகதிக் கூடாரங்களில், பள்ளிகளில், கிராமங்களில் நாடகங்களை அரங்கேற்றி மக்களுக்கு மன உறுதியையும் அரசியல் விழிப்புணர்வையும் அளித்தன. இது வெறும் கலை நிகழ்ச்சி அல்ல; ஒரு மன உளச்சிகிச்சையாகவும், ஒற்றுமையை உருவாக்கும் கருவியாகவும் இருந்தது.

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் கூட, கலை மற்றும் பண்பாட்டு இயக்கங்கள் ஊக்குவிக்கப்பட்டன. இளைஞர்கள் நாடகத்தின் மூலம் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
வீரச்சாவு, தியாகம், தாயகம் போன்ற கருப்பொருள்கள் நாடகங்களில் இடம்பிடித்தன. இத்தகைய நாடகங்கள் மக்கள் மனதில் தேசிய உணர்வை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டன. அதேசமயம், போரின் கொடூரங்களையும் மனித இழப்புகளையும் பதிவு செய்த ஆவணங்களாகவும் அவை திகழ்ந்தன.
புலம்பெயர் தேசத்தில் நாடகம்
புலம்பெயர் தமிழர்களிடையிலும் நாடகக் கலை ஒரு முக்கியமான பண்பாட்டு மற்றும் அரசியல் வெளிப்பாட்டாக வளர்ந்து வருகிறது.
தாயகத்திலிருந்து விலகிய வாழ்வில், தங்கள் அடையாளத்தைப் பாதுகாக்கவும், வரலாற்றையும் நினைவுகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் நாடகம் ஒரு வலுவான கருவியாக செயல்படுகிறது.

ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உருவான தமிழ் நாடகக் குழுக்கள், ஈழப் போராட்டம், இடம்பெயர்வு, அகதி அனுபவம், கலாச்சார முரண்பாடுகள் போன்ற கருப்பொருட்களை மேடையேற்றி வருகின்றன.
இந்நாடகங்கள் வெறும் கலை நிகழ்வுகளாக இல்லாமல், சமூக நினைவகங்களாகவும், நீதிக்கான குரல்களாகவும், அரசியல் சாட்சிகளாகவும் திகழ்கின்றன. மேலும், புதிய தலைமுறையினருக்கு மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றை உயிரோட்டமாகக் கற்பிக்கும் கல்வி மேடையாகவும் புலம்பெயர் நாடகங்கள் செயல்படுகின்றன.
சவால்களை எதிர்கொள்ளும் நாடகத்துறை
இன்றைய சூழலில், ஈழ நாடகம் புதிய சவால்களை எதிர்கொள்கிறது. (தமிழ் நாடகத்துறைக்கும் பல்வேறு சவால்கள் உண்டு. தமிழ்நாட்டிலும் இதுவே நிலை.) போருக்குப் பிந்தைய சமூகத்தில், நினைவுகள், மறதி, நீதியின்மை, அரசியல் கட்டுப்பாடுகள் ஆகியவை கலை வெளிப்பாட்டை பாதிக்கின்றன.
அரங்கச் செயற்பாடுகள் கணிசமான அளவில் குறைந்துள்ளன. கிளிநொச்சியில் மேடையேற்றப்பட்ட மண்குளித்து நாடகத்தின் இரு பாகங்கள், போருக்குப் பிந்தைய தமிழர் போராட்டத்தை சிறந்த எடுத்துரைப்பு மற்றும் அரங்க அமைப்புடன் வெளிப்படுத்தின.

நவீன அரங்க நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்படுகின்றன. அத்துடன் சமயம் சார்ந்த நாடகங்களும் இடையிடை அரங்கேறுகின்றன.
சமூகம் மற்றும் இனம் சார்ந்த நாடகத்துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை கண்கூடு. இருப்பினும், புதிய தலைமுறை கலைஞர்கள் டிஜிட்டல் ஊடகங்கள், குறுநாடகங்கள், பரிசோதனை நாடகங்கள் போன்றவற்றின் மூலம் தங்கள் குரலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எவ்வாறெனினும் ஈழத் தமிழர் வரலாற்றில் நாடகம் ஒரு முக்கியமான சாட்சியாகவும், எதிர்ப்பின் மொழியாகவும், அடையாளப் போராட்டத்தின் கருவியாகவும் திகழ்ந்துள்ள நாடக வடிவத்தை எதிர்காலத்திலும், உண்மை, நீதி, சுதந்திரம் ஆகியவற்றுக்கான குரலாக நாம் பயன்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |