முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் - இனப்படுகொலையை நினைவூட்டும் கஞ்சி!
மே மாதம் என்பது ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு சாதாரண மாதமல்ல. இனப்படுகொலையின் கொடிய நினைவுகள் மீள் எழுகிற காலம். தாயின் கரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் மௌனம் நினைவுகளைக் கீறுகிற காலம். மே மாதத்தின் நடுப்பகுதி வந்துவிட்டால், வடக்குக் கிழக்கின் காற்றே இனவழிப்பின் துயரத்தை சுமந்து வீசுகிறது. வீதிகளின் ஓரங்களில் மஞ்சள் மற்றும் சிவப்பு மலர்கள் பூக்கின்றன. நினைவுத் தூபிகள் கண் விழிக்கின்றன. உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் மீண்டும் ஒளிகொள்கின்றன. இப்படியாக ஈழ மண்ணில் கடந்த 12ஆம் நாளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் துவங்கியது.
நினைவில் அழியாத முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் என்பது வெறும் ஒரு இடத்தின் பெயராக இப்போது பார்க்கப்படுவதில்லை. ஒரு இனம் சந்தித்த மிகவும் கொடிய இனப்படுகொலை அரங்கேற்றப்பட்ட இடம். அது தமிழர் வரலாற்றில் இரத்தத்தில் எழுதப்பட்ட யுக புராணம். லட்சம் பொதுமக்கள் சிக்குண்டு, உணவின்றி, மருந்தின்றி, பாதுகாப்பின்றி வாழ்ந்த நாட்களின் நினைவுகள் புதைந்த நிலமது. பசியால் அழுத குழந்தைகள் பசியுடன் இனப்படுகொலை செய்யப்பட்டனர். தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு கொடுக்க ஒரு கைப்பிடி அரிசியைக்கூட தேடி அலைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனை நிலத்தில் குருதி வழிய வழியக் கிடந்தனர். உயிர் தப்பியவர்கள் கூட உயிரோடு இருப்பதற்காகவே குற்ற உணர்வுடன் வாழ வேண்டிய துயரத்தை பரிசளித்த பேரழிவின் இடமது.

இந்த துயர வரலாற்றை மறக்காமல் இருக்கவே ஆண்டுதோறும் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வாரம் ஒரு அரசியல் நிகழ்வு மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் கூட்டு நினைவுகளுமாகும். எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை அச்சுறுத்தல்கள் இருந்தாலும், ஈழ மக்கள், இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூரும் உரிமையை விடமாட்டார்கள். ஏனெனில் நினைவுகொள்ளல் என்பதுதான் இப்போது எங்களிடம் இருக்கிற ஆயுதம். இந்த நினைவேந்தல் வாரத்தை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குதலுடன் இன்றைய இளையவர்கள் அனுஷ்டிக்கத் தொடங்கியுள்ளனர்.
வடக்கு கிழக்கில் நினைவேந்தல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வல்வெட்டித்துறை, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் முல்லைத்தீவு என வடக்கு-கிழக்கு தாயகமெங்கும் மக்கள் திரண்டு, இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கனமழையையும் பொருட்படுத்தாது, கண்ணீருடன் மக்கள் கூடிநின்று அஞ்சலி செலுத்துவது என்பது இந்தத் துயரம் இன்னும் எத்தனை தலைமுறை கடந்தாலும் மறக்கப்படாது என்பதன் சாட்சியாக இருக்கிறது. முள்ளிவாய்க்கால் பசியின் நினைவாக, உயிர் காக்க மக்கள் குடித்த கடைசி நம்பிக்கையாக இருந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை இதன்போது இளையவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படியாக நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகும் போது பல இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிராம வீதிகளிலும், கோயில்களின் முன்பிலும், நினைவேந்தல் திடல்களிலும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதை வழங்குகிறார்கள். அந்த கஞ்சியைப் பெற வருபவர்கள் ஒரு வரலாற்றை நினைவுகூர வருகிறார்கள். இனப்படுகொலையை எப்படியேனும் நினைவுகொள்ளலாம். இனப்படுகொலைக்கு எப்படியேனும் நீதியை வலியுறுத்தலாம். முள்ளிவாய்க்கால் கஞ்சியும் இன்றெமது ஆயுதம்தான்.
இறுதி உணவு
சிறிதளவு அரிசி, கொஞ்சம் உப்பு, சில நேரங்களில் கிடைத்தால் சிறிது தேங்காய் பால் ஆகியவற்றால் ஆன முள்ளிவாய்க்கால் கஞ்சி அப்போது ஆயிரக்கணக்கான குழந்தைகளின் மக்களின் வாழ்க்கையை காத்தது. இனவழிப்பின் இறுதி நாட்களில் மக்கள் பலர் மரங்களின் கீழ், மணல் குழிகளில், உடைந்த கூடாரங்களில் வாழ்ந்தனர். குண்டுகள் ஒரு புறம் எங்கள் மக்களைக் கொல்ல தரையில் பசியும் இனம் அழித்தது. அப்போது பெரிய பாத்திரங்களில் தயாரிக்கப்பட்ட அந்த எளிய கஞ்சி, மனிதர்களின் வயிற்றை மட்டுமல்ல, பசியெனப்பட்ட இனவழிப்பின் கொடுமையில் உயிர் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையையும் காத்தது. சிறிதளவு கஞ்சியைப் பெற மக்கள் நீண்ட வரிசைகளில் காத்து நின்ற காட்சி உலகத் தமிழ் மக்களை உருக்கியது. பல குழந்தைகள் அந்த வரிசையிலேயே உயிரிழந்தன. அந்தக் கஞ்சியே பல குழந்தைகளுக்கும் உறவுகளுக்கும் இறுதி உணவானதும் துயர் பெருக்கும் நினைவு.

சில தாய்மார்கள் தங்களின் பசியை மறைத்து குழந்தைகளுக்கே கஞ்சியை கொடுத்தனர். இப்படியாக பெரும் யுத்தக் களத்தில் மாபெரும் கருணையும் மாபெரும் மனிதாபிமானமும் வெளிப்பட்டு நின்றது. உண்மையில் இன்று கஞ்சியின் வாசனை காற்றில் பரவுகிறபோது, பலரின் கண்களில் நீர் பெருகுகிறது. “அந்நாட்களில் நாங்கள் இதைத்தான் குடித்தோம்” என்று சொல்லும் நடுங்கும் குரல்கள் போரின் சாட்சியங்களாகின்றன. அமைதியாக கஞ்சியை அருந்தும் சனங்களின் கதைகளும் நம் செவிகளில் விழுகின்றன./
காலத்தை படித்தல்
இன்றைய தலைமுறைக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி ஒரு வரலாற்றுப் பாடமாகிறது. இனவழிப்புப் போரின் கொடுமையை ஈழத் தமிழ் மக்கள் கடந்து வந்த வரலாற்றை இன்று நாம் அறியும் பேசவும் முடியாத காலத்தில் இத்தகைய செயற்பாடுகள் வழியாக கடந்த காலத்தை நாம் ஓரளவேனும் நெருங்கவும் உணரவும் முடியும். இதனால் பல பாடசாலை மாணவர்களும், பல்கலைக்கழக இளைஞர்களும் இந்த நிகழ்வுகளில் ஈடுபடுகின்றமையின் வாயிலாக இனப்படுகொலை குறித்த நினைவுகளை அழிக்க முடியாது என்பதை அமைதியான முறையில் இந்த உலகிற்கு தெரிவிக்கிறார்கள்.

போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை அவர்களின் குடும்பங்கள் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் பல தாய்மார்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை மார்போடு அணைத்தபடி போராடிக் கொண்டே இருக்கிறார்கள், போராடிக்கொண்டே இறக்கிறார்கள். முள்ளிவாய்க்காலைக் கடந்த ஒவ்வொரு தமிழரும் உடலிலும் மனதிலும் போரின் ஆறாத காயங்களுடன் உலகமெங்கும் வாழ்கின்றனர். முள்ளிவாய்க்கால் போரை நடத்திய அரசும், அதற்குச் சார்பாக நிற்பவர்களும் முள்ளிவாய்க்கால் காயத்தை மறந்துவிடுங்கள் என்பதுதான் வேடிக்கை.
உண்மையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவேந்தல் செய்வது என்பது, நம் காயங்களை ஆற்ற நினைக்கிற காரியம். அதனை தடுப்பது என்பது காயங்களை மறைக்கிற காரியம். இனப்படுகொலை, காணாமல் ஆக்கப்பட்டமை, போரின் காயங்கள், இழப்புக்கள் என இனவழிப்பின் அத்தனை கொடுமைகளுக்குமான நீதியை ஈழத் தமிழினம் வேண்டிய கடந்த 17 வருடங்களாகப் போராடுகிறது. ஆனால் அதற்கான நீதியை முன்வைக்கிற எண்ணம் ஶ்ரீலங்கா அரசுக்கு துளியும் இல்லை. மேலும் ஒடுக்குமுறையை விரிவாக்குகிறது. இந்த நிலையில்தான் எமது நீதிக்கும் அடுத்த தலைமுறைக்கான அறிவூட்டலுக்காகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் எங்கள் நேர்மையும் பொறுப்புமிக்கதுமான செயலை ஆற்றுவோம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 13 May, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.