ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவே முடியாது...! அமெரிக்காவின் முற்றுகைக்கு ஈரான் பதிலடி
அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து நீட்டித்து வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகெர் காலிபாப் தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
போர்நிறுத்தம்
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா ஒருபுறம் போர்நிறுத்தம் என்று கூறிக்கொண்டு மறுபுறம் கடற்படை முற்றுகையின் மூலம் உலகப் பொருளாதாரத்தைப் பிணைக் கைதியாக வைத்திருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இத்தகைய செயல்பாடுகள் தொடரும் வரை முழுமையான போர்நிறுத்தம் என்பது அர்த்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர்நிறுத்த மீறல்கள்
அமெரிக்காவின் இத்தகைய பகிரங்கமான போர்நிறுத்த மீறல்கள் நிலவும் சூழலில் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்துப் பேசுவதற்கே இடமில்லை எனவும் மேலும் அனைத்து முனைகளிலும் சீயோனிச (இஸ்ரேல்) போர் வெறி நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவோ அல்லது அதிகார மிரட்டல்கள் மூலமாகவோ ஈரான் மீது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானிய தேசத்தின் உரிமைகளை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதே இந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரே வழி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |