ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம்! ஈரானால் அடுத்தடுத்து சிதைக்கப்பட்ட கப்பல்கள்
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய புரட்சிகர காவல்படையினரால் (IRGC) மூன்று சரக்குக் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலில் 'யூபோரியா' (Euphoria) என்ற கப்பல் ஈரானியக் கடற்பரப்பிற்கு அருகில் தரைதட்டியுள்ளதாகவும், 'எம்.எஸ்.சி பிரான்செஸ்கா' (MSC Francesca) மற்றும் 'எபமினோண்டாஸ்' (Epaminondas) ஆகிய கப்பல்கள் ஈரானியப் படையினரால் கைப்பற்றப்பட்டு அந்நாட்டுக் கரையை நோக்கித் திருப்பப்பட்டுள்ளதாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பனாமா நாட்டின் கொடியுடன் பயணித்த 'எம்.எஸ்.சி பிரான்செஸ்கா' கப்பல், ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றபோது ஈரானியக் கரையில் இருந்து சுமார் 6 கடல் மைல் தொலைவில் வைத்து தாக்கப்பட்டுள்ளதுடன், அதன் அடிப்பகுதி மற்றும் ஊழியர்கள் தங்கும் பகுதி சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
தீவிரமடைந்துள்ள போர்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடனான ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளதாக அறிவித்த பின்னணியிலேயே இந்த அதிரடித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்தப் பாதையில் கப்பல்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளமை சர்வதேச எரிசக்திச் சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கப்பல்களில் உள்ள பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |