வளைகுடா நாடுகளின் எரிசக்தித் துறையை முழுமையாக அழிப்போம்: ஈரான் பகிரங்க மிரட்டல்
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீண்டும் தாக்கப்பட்டால் அண்டை வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில்துறையை முழுமையாக அழித்துவிடுவோம் என இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான ஈரானின் தெற்கு பார்ஸ் (South Pars) தளம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமது எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால், நட்பு நாடுகளின் உள்கட்டமைப்புகள் அழியும் வரை தாக்குதல் ஓயாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டப் பதிலடி
அடுத்தகட்டப் பதிலடி இன்றைய இரவுத் தாக்குதல்களை விடக் கடுமையாக இருக்கும் என்றும் IRGC தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கத்தாரின் ராஸ் லாஃபன் (Ras Laffan) எரிவாயு நிலையம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதைக் கத்தார் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கைக்குக் கத்தார் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி நிலையங்களுக்கும் ஈரான் பகிரங்க அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் எரிசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தத் தொடர் தாக்குதல்கள், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |