மறைக்கப்படும் தோல்வி! அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் அனுப்பிய செய்தி
தங்கள் தோல்வியை ஒரு உடன்படிக்கை என்று அழைக்க வேண்டாம் என அமெரிக்காவை ஈரானின் முக்கிய இராணுவத் தலைமையகமான கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி கிண்டல் செய்துள்ளார்.
ஈரானிய ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளிச் செய்தியில், "உங்கள் உள்நாட்டு மோதலின் நிலை, நீங்கள் உங்களுக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்குச் சென்றுவிட்டதா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் பேச்சுவார்த்தை
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை பெருமை பேசும் நிலையில், அமெரிக்கா தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கலாம் என ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஒரு உடன்பாடு எட்டப்படும் நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்ததோடு, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் "தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்" என்றும் கூறியிருந்தார்.
எனினும், இடைத்தரகர்கள் வழியாக செய்திகள் பரிமாறப்பட்டதாக மட்டும் கூறி, ஈரான் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் தொடர்பான எந்த தகவல்களையும் உறுதிப்படுத்தவில்லை.
எண்ணெய் விலைகள்
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர், “நீங்கள் ஒரு காலத்தில் பெருமை பேசிய மூலோபாய சக்தி, ஒரு மூலோபாயத் தோல்வியாக மாறியுள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தை அமெரிக்கத் தலைவர்கள் தங்கள் மனதிலிருந்து அகற்றும் வரை, எரிசக்தி மற்றும் எண்ணெய் விலைகள் முன்பிருந்த நிலைக்குத் திரும்பாது”. என்று எச்சரித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, இந்த வாரம் எண்ணெய் விலைகள் குறைந்திருந்தாலும், போருக்கு முன்பு இருந்ததை விட அவை இன்னும் கணிசமாக அதிகமாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |