வெள்ளைக்கும் பச்சைக்கும் இடையிலான யுத்தம் நிறைவடையுமா!
"யுத்தத்தை யாரும் எப்போதும் ஆரம்பிக்கலாம், ஆனால் ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தை ஆரம்பித்தவர்களாலும் நிறுத்த இயலாது, யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின் யுத்தத்தை யுத்தமேதான் வழிநடத்தும்." இந்தப் போரியற் தத்துவம் இன்றைய மத்திய கிழக்கின் போருக்கும் பொருத்தமானதாகவேயுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் எந்தவித நியாயமுமற்ற தாக்குதலை ஆரம்பித்து நான்கு வாரங்கள் கழிந்த நிலையிலும் தாக்குதல் தொடர்கிறது.
இந்த யுத்தம் முடிவுக்கு வரவேண்டியது அவசியமானது. உலகின் இயல்பு வாழ்க்கையை இது மோசமாக பாதித்திருக்கிறது. யுத்தத்தை ஆரம்பித்த அமெரிக்கத்தரப்பால் இதனை நிறுத்த முடியாமல் உள்ளது. இந்தப் போரை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டா என்பதை பற்றியே இந்தப் பத்தி ஆராய்கிறது.
உலகளாவிய அரசியலில் போரும், அதற்குப் பின்னான சமாதானமும், அமைதியும் ஏற்படுவது இயல்புதான். ஆனால் போரின் கொடுமையும், வலியும், இழப்பிலிருந்தும் மனித குலம் நீண்டெழுவது மிக கடினமானது. அது மனித வாழ்க்கையின் பெரும் பகுதியை விழுங்கி விடுகிறது. பேரரசவாதம் எங்கெல்லாம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் போருக்கான முஸ்தீபுகள் தோற்றம் பெறும். இன்றைய உலகளாவிய வல்லமை வாய்ந்த அரசுகளின் தேசிய நலன் என்பது உலகளாவிய மூல வளங்களைச் சுரண்டிச் செல்வதும், அந்த மூல வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்தி, சந்தைகளை கைப்பற்றுவதும்தான். தமக்கான சந்தை வாய்ப்புகள் தடைப்படுகின்ற போதும், தமக்கான மூல வளங்கள் சுரண்டல் தடை படுகின்ற போதும், அவ்வாறு தடையாக இருக்கும் நாடுகள் மீது போர் தவிர்க்க முடியாததாகிறது.
அத்தகைய போர்களைப் பேரரசவாதம் தோன்றிய காலத்தில் இருந்து காலத்திற்குக் காலம் மனிதகுலம் கண்டிருக்கிறது. வாஸ்கோடகாமா கொலம்பஸ் யுக ஆரம்பத்தில் வாஸ்கோடகாமா வாசனை திரவியங்களுக்காகவும், கிறிஸ்தவத்திற்காகவும் பெரும் போர்களைச் செய்தார்.
அதேபோல அமெரிக்க கண்டத்தில் கொலம்பசும் அவர் பின் வந்தவர்களும் தங்கத்துக்காகவும், கிறிஸ்தவத்திற்காகவும் செவ்விந்தியர்களை கொன்றொழித்தனர். அதிகாரவெறிதான் ஆக்கிரமிப்புச் செய்வதற்குக் காரணம் ஒன்றைத் தேடும். அந்தக் காரணம் எதுவாகவும் இருக்கலாம். அதையே நீதி, நியாயம் எனக் கூறும்.
இதற்கு ஏற்ற தமிழில் பஞ்சதந்திரக் கதை ஒன்றுண்டு. "ஆற்றங்கரையில் காரணம் இன்றி யாரையும் தாக்கக் கூடாது என்ற விதி அமுலில் இருந்த ஆற்றில் நீர் குடிக்க வெள்ளாடு சென்றது. அங்கே பசி மிகுந்த சிங்கமும் வந்தது. சிங்கத்துக்கு ஆட்டை வேட்டையாட விருப்பம் ஆனால் விதியை மீற முடியாது எனவே அதற்கு ஒரு காரணம் தேவைப்பட்டது.
அந்த காரணத்திற்கு ஆட்டை பார்த்து ஆறு மாதங்களுக்கு முன் என் குட்டியை நீதான் அச்சுறுத்தினாய் என்றது. அப்போது வெள்ளாடு நான் பிறந்து மூன்று மாதங்கள் மட்டுமே என்றது. அடுத்த சிங்கம் நீ நான் குடிக்கும் நீரை அசுத்தப்படுத்தி விட்டாய் என்றது. வெள்ளாடு ஆற்றின் கீழ் பகுதியில் நீர் அருந்துகிறேன் நான் குடித்த நீர் மேலே உங்கள் பக்கம் வராது என்றது. உடனே சிங்கம் என்னுடன் நீ எதிர்த்து பேசுகிறாயே என்ற ஒரு குற்ற காரணத்தைக் கண்டுபிடித்து வெள்ளாட்டை கொன்று தின்றதாம்." இது இன்றைய பேரரசவாதத்திற்கும், வல்லமை வாய்ந்த நாடுகளுக்கும் பொருத்தப்பாடு உடையதாக உள்ளது.
இந்த அடிப்படையிற்தான் ஐரோப்பியர்களுக்கும், அராபியர்களுக்கும் இடையிலே 11ஆம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை நடந்த சிலுவைப் போர் நடாத்தப்பட்டது. இது முஸ்லிம்கள் ஏற்கனவே ஆட்சி செய்த Jerusalem நகரை கிறிஸ்தவர்கள் “இது எங்கள் புனித நிலம்” என்று கூறி ஜெருசலத்தைக் கைப்பற்ற நடத்தப்பட்ட மத அடிப்படையிலான போர். இந்தப்போர் நான்கு கட்டங்களாக நிகழ்ந்தது. யார் இந்தப் போரை தொடக்கி வைத்தார்கள் என்றால் 1095ல் வத்திக்கான் போப்பாண்டவர் அர்பன்ll (Pope Urban II) என்பதிலிருந்து போருக்கான காரணங்களின் விசித்திரங்களை நோக்க வேண்டும்.
பாரசீகப் பேரரசுக்கும், கிரேக்கர்களுக்கும் இடையிலான யுத்தம் 2500 ஆண்டுகளிற்கும் மேற்பட்ட பழமையான பகை கொண்டது அந்தப் பகை பின்னாளில் சிலுவைப் போராக உருவெடுத்து. இன்று மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் மூல வளங்களைச் சுரண்டுவதற்கான போராக மாற்றமடைந்து நிற்கிறது. ஐரோப்பியரான வெள்ளை இனத்தவர்களுக்கும், பச்சை நிறத்தை அடையாளமாகக் கொண்ட இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பகை யுத்தங்களை வரலாற்றாய்வாளர்கள் மத்திய கிழக்கு யுத்தம் என்கின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நவீன காலத்தில் சீனா மீது பிரித்தானியா தனது தேசிய நலன் அதாவது தனது வர்த்தகத்திற்கு தடையாக இருந்த சீனா மீது போர் தொடுத்தது. அதனை இன்று முதலாம்அபின் யுத்தம் (1839–1842) என அழைக்கிறது. அந்த யுத்தம் இரண்டு காலகட்டங்களில் நிகழ்ந்தது. முதல் அபின் யுத்தம் 1839-ல் குவாங்சோ (Guangzhou) என்ற கடலோரப்பகுதியில் கிங் வம்சத்தின் தாவோகுவாங் பேரரசரின் கீழ் லின் ஜெக்சு(Lin Zexu) என்ற நேர்மையான, கடமை உணர்வு கொண்ட, சீன அதிகாரி அபின் விற்பனை, மற்றும் பயன்பாட்டைத் தடைசெய்தார்.
பிரித்தானிய வணிகர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான அபின் பெட்டிகளைப் பறிமுதல் செய்து அந்த அபினை பொதுமக்கள் முன்பு அழித்தார். அத்தோடு Lin Zexu பிரித்தானி மகாராணி விக்ரோரியாவுக்கு“ஏன் உங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட அபினை எங்கள் நாட்டில் விற்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி கடிதம் எழுதினார். இது அவரது நெறிமுறை, மற்றும் நீதி உணர்வை காட்டுகிறது.
ஆயினும் இங்கே நீதி முறைகளை மீறி தனது நாட்டிலே தடை செய்யப்பட்டிருந்த போதைப் பொருளை சீனாவில் விற்பதற்கு துறைமுகங்களைத் திறக்கும்படி பிரித்தானிய தொடுத்த அபின் யுத்தம் பிரித்தானியர்களுக்கு நீதியாகத் தென்பட்டது.
தோற்கடிக்கப்பட்ட சீனாவுடன் 29-08-1842ல் நாங்ஜிங்(வடக்கு தலைநகரம்) துறைமுகத்தில் தரித்துநின்ற HMS Cornwallis என்ற பிரித்தானிய போர்க்கப்பலில் பிரித்தானிய பிரதிநிதியாக சேர் ஹென்றி பாட்டிங்கர் மற்றும் சீனாவின் சிங் அரசவம்சம் சார்பில் கீயிங், யிலிபு, நியு ஜியான் ஆகியோருக்கிடையில் நாங்ஜிங் ஒப்பந்தம் (Treaty of Nanjing) கையெழுத்தானது. இதன் மூலம் ஹாங்காங் பிரித்தானியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. கேண்டன்(Canton), அமோய்(Xiamen), ஃபூச்சோ(Foochow), நிங்பே(Ningbe), ஷாங்காய்(Shanghai), துறைமுகங்கள் வர்த்தகத்திற்காகத் திறக்கப்பட்டன.
போர் இழப்பீடாக சீனா 21 மில்லியன் வெள்ளி டாலர்களை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது பிரித்தானியர்களுடைய தேசிய நலனுக்கு நலன்பயக்கக்கூடியதாக இருந்தது. போரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, "பிரிட்டிஷ் ஆயுதங்களின் வெற்றி, 1842"(“The Triumph of the British Arms, 1842”) நினைவுத் தங்கப் பதக்கத்தை அச்சிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அது சீனா மக்களின் ஆழ்மனதை வெகுவாகப் பாதித்தது. இது சீனவரலாற்றில் "நூற்றாண்டு கால அவமானம்" (Century of Humiliation) என அழைக்கப்படுகிறது.
சீனாவில் அபின் (Opium) பயன்பாட்டைத் தடுக்க மிகுந்த முயற்சி எடுத்த Lin Zexu இன்று சீனாவில் ஒரு தேசிய வீரராக மதிக்கப்படுகிறார். அவர் போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறார்.
இன்று கனடாவிலுள்ள Montreal நகரத்தின் Chinatown Montreal பகுதியில் நிறுவப்பட்ட அவரது சிலையைக் காணலாம். அபின் யுத்தத்தின் விளைவு சீனர்கள் தம்மை நவீன மயப்படுத்தவும், எதிர்கால பொருளாதார வல்லரசாக வளர்வதற்குமான சிந்தனை தூண்டலை தூரகிழக்கு ஆசியாவில் ஏற்படுத்திவிட்டது. சீனாவின் பாரிய நிலப்பரப்பும், பிரம்மாண்டமான சனத்தொகையும் அதனை ஒரு சக்தி வாய்ந்த நாடாக இன்று மாறிவிட்டது.
சீனர்களுக்கும் மேற்குலக வெள்ளையர்களுக்கும் இடையிலான வரலாற்றுப் பகை பொருளியல் ஈட்டத்துக்கான ஒரு யுத்தத்தை இன்று அவாவின் நிற்கின்றது என்பது இன்றைய வரலாற்று இயங்கு போக்கில் தவிர்க்க முடியாத ஒன்றே. மேற்படி சீனாவின் எதிர்வினை போன்றே பாரசீகத்திலும் எதிர்காலத்திலும் நிகழும்.
மொரோக்கோவில் இருந்து ஈரான் வரையான வட ஆப்பிரிக்க பகுதியும், மேற்காசியாவும் அதனோடு இணைந்த மத்திய ஐரோ-ஆசிய பகுதியையும் உள்ளடக்கி மூன்று கண்டங்களை இணைக்கின்ற அராபிய-பாரசீக பண்பாட்டை கொண்ட நிலப்பகுதியையே மத்திய கிழக்கு என மேற்குலகத்தவர் குறிக்கின்றனர்.
இந்த இஸ்லாமிய நிலப்பகுதியை இராணுவ நோக்கு நிலையில் ஆய்வாளர்கள் பச்சை என குறியீட்டு பெயரால் அழைக்கின்றனர். மேற்குலகத்தினை வெள்ளை என்று அழைக்கின்றனர். அவ்வாறே தூரகிழக்காசியாவில் சீனா உள்ளிட்ட மஞ்சள் நிற மக்களைக் கொண்ட பகுதியினரை மஞ்சள் என்றும், ரஷ்யாப் பகுதியையும் கம்யூனிச கொள்கையுடைய நாடுகளையும் சிகப்பு என அழைக்கின்றனர்.
“சீனா ஒரு தூங்கிக்கிடக்கும் மாபெரும் சக்தி. அந்த மாபெரும் சக்தி விழித்தெழுந்தால், உலகம் அதிரும்”(“China is a sleeping giant. If the giant wakes up, will the world shake”) என்று நெப்போலியன் கூறியதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் (ஆனால் நெப்போலியன் கூறியதற்கான உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை).
இத்தகைய சீனாவின் அடிக்கட்டுமான பலம் பற்றி ஏற்கனவே எடை போடப்பட்டாலும் மஞ்சளுக்கும் வெள்ளைக்குமான யுத்தத்தின் ஒரு முன்னோட்டம்தான் இப்போது பாரசீக வளைவுடாவில் நடக்கும் தாக்குதல்களாகும். இந்த தாக்குதல்கள் என்பது ஈரான் தரைக்குள் இறங்கி முன்னேறி ஆக்கிரமிக்கும் படை நடவடிக்கைகள் அல்லாமல் நவீன ஆயுத தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி நடத்தப்படும் ஒரு உயர் தொழில்நுட்பப் போராக அல்லது தொழில்நுட்பத் தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும்.
வல்லமை வாய்ந்த நாடுகள் தமது தேசிய நல்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற போது பயத்தாலும், நயத்தாலும் தமது நலன்களை அடைய முயற்சிக்கின்றனர். அந்த வழிமுறைக்கு கட்டுப்படாத, கீழ்படியாதவர்களை அடக்கி ஒடுக்க யுத்தம் தேவைப்படுகிறது.
அந்த யுத்தத்துக்கு அவர்களுக்கு ஒரு காரணம் தேவை. அந்தக் காரணம் உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் உலகளாவிய கருத்து மண்டலத்தில் அதை உண்மை போல காட்டுவதற்கு தமது அதிகார வல்லமையை பயன்படுத்தி ஊடக வாயிலாக கருத்து பரிமாற்றத்தை செய்து அதனை உண்மை என நம்பும் அளவிற்கான ஒரு கருத்து மண்டலத்தை உருவாக்கி விடுகின்றனர். அதன் பின்னர் பன்னாட்டு ஆதரவோடு போரை தொடுக்கவும் தயங்குவதில்லை.
இத்தகைய போருக்கு உதாரணம் ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த போர், சதாம்குசையின் இராசாயன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்றும், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார் என்ற குற்றச்சாட்டிலும்தான் ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது.
யுத்தத்தின் முடிவில் எந்த ஒரு இராசாயன ஆயுதத்தையும் அவர்கள் காண்பிக்கவில்லை. இங்கே உண்மையும் நீதியும் மறைக்கப்பட்டது. வெற்றி பெற்ற அமெரிக்கர்களால் நியமிக்கப்பட்ட குருதிஸ் இஸ்லாமிய நீதிபதியால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இஸ்லாமிய நாடான மலேசியாவில் தயாரிக்கப்பட்ட தூக்குக் கயிற்றால், இஸ்லாமியர்களினால் தியாகத்தை நினைவுகூர்ந்து ஆட்டு இறைச்சி தானம் வழங்கும் பக்ரீத்(Eid al-Adha) எனப்படும் ஈகை புனிதநாளில்(30-12-2006) தண்டனை நிறைவேற்றும் ஊழியரான இஸ்லாமிய அலுக்கோஸ் ஒருவரால் சுருக்குக்கயிறு மாட்டப்பட்டு சதாம் ஹுசைன் தூக்கில் இடப்பட்டார் என வரலாறு எழுதப்பட்டு விட்டது.
ஈராக்கிற்கு அடுத்தபடியாக மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு சவாலாக இருக்கக்கூடியதும், அமெரிக்க நலன்களை பாதிக்க கூடியதமாக இருக்கக்கூடிய ஒரே ஒரு நாடு ஈரான் மட்டுமே. ஏற்கனவே மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு சவாலாக இருந்த பின்லேடன், சதாம் ஹுசைன், கேணல் கடாபி போன்றவர்கள் கொல்லப்பட்டு அந்நாடுகள் அமெரிக்காவிற்கு அடிபணிந்து விட்டன.
அந்த வரிசையில்தான் ஈரானின் அணு விஞ்ஞானிகளும், ராணுவ தளபதிகளும், அயத்துல்லா அலி கோமேனியும் கொல்லப்பட்டார்கள். இதன் மூலம் ஈரானை வழிக்கு கொண்டுவரலாம் என அமெரிக்கா நம்பியதும் உண்மைதான். ஆனால் அங்கு நிகழ்ந்ததோ வேறு.
அமெரிக்காவின் தேசியநலன் என்பது உலகளாவிய மூல வளங்களை அமெரிக்க தேசத்துக்கு கொண்டுவந்து அதன் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான். அமெரிக்காவின் தேசிய நன்களை பாதிக்கக் கூடிய வகையில் எந்த நாடுகள் செயற்பட்டாலும் அவற்றினை கட்டுப்படுத்தவும், அவற்றின் மீது படையெடுக்கவும் அமெரிக்கா பின்னின்றது கிடையாது.
அந்த அடிப்படையில்தான் "அமெரிக்காவுக்குரிய எண்ணெய் வழங்கள் தடைப்பட்டால் எந்த ஒரு எண்ணெய் வளமுள்ள நாட்டிகுள்ளும் புகுந்து எண்ணெய் வழங்கள் நடவடிக்கையை சீர்செய்ய அமெரிக்கப்படை தயங்காது" என்னும் முக்கிய கொள்கையை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜிம்மிக் காட்டர் 23-01-1980ல் அன்று State of the Union Addressல் உரையில் தெரிவித்தார்.
இதன் மூலம் மத்திய கிழக்கிலும், உலகின் எந்தப் பாகத்திலும் உள்ள எண்ணெய் வளங்கள் அமெரிக்காவின் முக்கிய தேசிய நலனாக கருதப்படும் என்றும், அந்தப் பகுதியில் நாடுகளோ அல்லது வெளிநாட்டு சக்திகள் கட்டுப்பாடு செலுத்த முயன்றால் அது அமெரிக்காவின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்பதாகவும். அவ்வாறு ஏற்பட்டால் அமெரிக்கா இராணுவ சக்தியையும் (கடற்படை உட்பட) பயன்படுத்த தயங்காது என்பதாக, உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுவதாக அமைந்திருந்தது.
அத்தகைய ஒரு நிலைப்பாட்டைத்தான் இன்று அமெரிக்க ஜனாதிபதி ராம்ப் குறிப்பிடுகிறார். இங்கே அமெரிக்காவுக்கு தேவை மத்திய கிழக்கைக் கட்டுப்படுத்துவது, அதற்கு தேவையான காரணங்களை அவர்களே தேடிக் கண்டுபிடித்து மேற்குலக ஊடகங்கள் ஊடாக பரப்புவது, அதனையே பேசுபொருளாக்கி உலகை நம்பவும் வைத்து விடுவார்கள். இதுவே இப்போது ஈரான் மீதான குற்றச்சாட்டுகளாக இருக்கின்றது. இத்தகைய ஒரு குற்றச்சாட்டையே ஏற்கனவே முன்வைத்து போர் தொடுத்து ஈராக்கை அழித்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது பாரசீக வளைகுடாவில் நடக்கும் தாக்குதல்கள் ஈரானை ஒருபோதும் அடிபணிய வைக்க மாட்டாது. மாறாக வயது முதிர்ந்த அனுபவம் மிக்க அலி கோமேனியையும், படைத்தளபதிகளையும் கொல்வதன் மூலம் ஈரானின் படைக்கட்டுமானமோ, அரசியல் கட்டுமானங்களோ சிதைக்கப்பட்டு விட்டதாக எண்ணி விட முடியாது.
ஈரானின் ஒன்பதரை கோடி மக்களில் எட்டு கோடி பாரசீகர்கள் ஈரானிய தேசியவாதத்தின் கீழ் அணி திரண்டு இருக்கிறார்கள். முதியவர்களை கொல்வதன் மூலம் இளைய துடிப்புள்ளவர்கள் அந்தப் பொறுப்புக்களை வகிக்கின்றபோது கொல்லப்பட்டமையின் பெயரால் அவர்கள் மிக மூர்க்கத்தனமாக போராடுவார்களே அன்றி அரசியல் பேச்சுவார்த்தை மேசைக்கு ஒருபோதும் வர மாட்டார்கள்.
ஏற்கனவே ஈரானில் இருந்த அனுபவம் வாய்ந்த முதியவர்களைக் வைத்தக்கொண்டு அவர்கள்மீது அழுத்தங்களை பிரயோகித்து அவர்களை பேச்சுவார்த்தை மேசையில் இருத்தி தமது நலன்களை அமெரிக்கா பெற்றிருந்தால் அது ஒரு நிரந்தர வெற்றியை இருந்திருக்கும். மாறாக அவர்களுடைய ஆன்மீகத் தலைவர்களையும், ராணுவ தளபதிகளையும் கொல்வதன் மூலம் இப்போது எட்டு கோடி மக்களின் கடும் சீற்றத்தையும், எதிர்ப்பையும் மேற்குலகத்தவர் சம்பாதித்துவிட்டார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் ஈரானியர்களுடன் ஒரு நீண்ட யுத்தத்திற்கே இவர்கள் வாய்க்கால் வெட்டி விட்டுவிட்டார்கள். எனவே மத்தியகிழக்கில் அழித்தொழிப்பு யுத்தங்கள் தொடர் கதைதான் என்று சொல்வதே பொருந்தும்.