உலக நீர் தினம்… இப்போது எண்ணெய்க்கான யுத்தம்... இனி குடி நீருக்காகவும் நடக்குமா...
மார்ச் 22 உலக நீர் தினம். 1992ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாட்டின் பின்னணியில், 1993ஆம் ஆண்டு முதல் இந்த நாள் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்படுகின்றது.
நீராலானது உலகு. நீரின்றி அமையாது உலகு. உலகின் அத்தியாவசிய வளமான தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதன் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான கருப்பொருளின் கீழ் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. நீரின் நிலைத்தன்மை, பாதுகாப்பு, அணுகல், காலநிலை மாற்றம் ஆகியவை மையமாகக் கொண்டு இந்நாளின் கருப்பொருட்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.
நீர் என்பது மனித உரிமை
உலக நீர் தினத்தின் முக்கிய நோக்கம், ‘நீர் என்பது மனித உரிமை’ என்ற உண்மையை வலியுறுத்துவதாகும். உலகின் பல பகுதிகளில் இன்னும் கோடிக்கணக்கான மக்கள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க முடியாத நிலையில் வாழ்கின்றனர்.

நகரமயமாதல், தொழில்துறை வளர்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவை நீரின் தேவை அதிகரிக்க காரணமாகின்றன. ஆனால், அதற்கேற்ப நீர் வளங்கள் பாதுகாக்கப்படவில்லை. இதனால், இன்று நீர் பற்றாக்குறை உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
நீர்வளம் இவ்வாறு குறைந்து வருகிறது என்பது கவலைக்குரிய விடயமாகும். நிலத்தடி நீர் அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ளப்படுவது, ஆறுகள் மற்றும் ஏரிகள் மாசுபடுவது, காடுகள் அழிக்கப்படுவது, காலநிலை மாற்றத்தால் மழைமுறை சீர்குலைவது போன்ற காரணிகள் நீர் வளத்தை வேகமாகக் குறைத்து வருகின்றன.
விவசாயத்திற்காக அதிக அளவில் நீர் பயன்படுத்தப்படுவது, நகரங்களில் நீர் வீணாகும் நடைமுறைகள், தொழிற்சாலைகளின் கழிவுநீர் மாசு ஆகியவை இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துகின்றன.
நீரின்றி வாழ்வில்லை
நீரைப் பாதுகாப்பது இன்றைய உலகில் மிக அவசியமான செயற்பாடாகிறது. நீர் இல்லாமல் மனித வாழ்வு சாத்தியமில்லை. நீரின்றி வாழ்வில்லை. ஏனெனில் நீரானது உணவு உற்பத்திக்கும், சுகாதாரத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படையாகிறது.
எனவே, நீரைச் சேமிப்பது, மழைநீரை சேகரிப்பது, நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது, மாசுபாட்டைத் தடுக்குவது ஆகியவை உலகமெங்கும் வாழும் ஒவ்வொரு மனிதரதும் பொறுப்பாகும். அரசு மட்டுமின்றி, சமூகங்களும், தனிநபர்களும் இணைந்து செயல்படும் போது மட்டுமே நீர் வளத்தை நிலைநிறுத்த முடியும்.

நீர் விற்பனைப் பொருளாக மாறுவது, மனிதகுலத்தின் அடிப்படை வாழ்வுரிமையைச் சந்தைக்குள் தள்ளும் ஆபத்தான மாற்றமாகும். இயற்கையாக எல்லோருக்கும் பொதுவான வளமாக இருக்க வேண்டிய தண்ணீர், இன்று போத்தல்களிலும், தனியார் கட்டுப்பாட்டிலும் விற்கப்படும் விற்பனைப் பொருளாக மாறியுள்ளது.
இது வெறும் பொருளாதார மாற்றம் அல்ல. சமூக அநீதி உருவாக்கும் மனித விளைவு. பணம் உள்ள மேல்தட்டு வர்க்கத்தினருக்குச் சுத்தமான நீர் எளிதில் கிடைப்பதும் ஏழை எளிய மக்கள் மாசடைந்த நீரைப் பருகுவதுமான பெரும் பாகுபாட்டுச் சூழல் மிகவும் ஆபத்தானது. மனித சமூகத்தில் அடுக்குகளையும் பிளவுகளையும் விளைவிக்கும்.
நீரின்றித் தவிக்கும் மக்கள்
நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி விற்பனை செய்யும் நிறுவனங்கள், உள்ளூர் மக்களின் நீர் ஆதாரங்களைச் சுரண்டுகின்றன. இது முன்பு இந்தியாவில் தொடங்கி இன்று குறிப்பாகப் போருக்குப் பிறகு, வடக்கு கிழக்கு ஈழத்திலும் வந்துவிட்டது. இதன் விளைவாக, நீர் சமத்துவம் குலைகின்றது.
மனிதர்களுக்கிடையிலான விலகல்கள் அதிகரிக்கின்றன. எனவே, நீரை ஒரு வணிகப் பொருளாக ஆக்காமல் ஒரு அடிப்படை மனித உரிமையாகக் கருதி பாதுகாக்க வேண்டியது அவசியமானது. குடிநீர் இன்றி தவிக்கும் உலக மக்களின் நிலை கண்டு, மனிதகுலம் மிகவும் தலைகுனிய வேண்டிய விசயமாகும்.

உலகின் பல பகுதிகளில் கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதுகாப்பான குடிநீரை அடைய முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் பல கிலோமீற்றர் தூரம் நடந்து மாசடைந்த நீரை சேகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த நீர் பற்றாக்குறை, ஆரோக்கியப் பிரச்சினைகள், குழந்தைகள் மரணம், கல்வி இழப்பு, பெண்களின் சுமை அதிகரிப்பு என்று ஒரு சமூகத்தின் வாழ்வில் பல தீவிர விளைவுகளை உண்டுபண்ணுகிறது.
சுத்தமான குடிநீர் இல்லாதிருப்பது என்பது வெறும் வசதி பற்றாக்குறையல்ல, அது மனித உயிரையும் கண்ணியத்தையும் மதிப்பான வாழ்வையும் பாதிக்கும் பிரச்சினை. இந்நிலை, உலகளாவிய வளப் பகிர்வில் உள்ள சமமின்மையை வெளிப்படுத்துவதோடு, நீர் என்பது அடிப்படை மனித உரிமை என்பதை நினைவூட்டுகிறது.
நீருக்கான யுத்தம்
உலக நாடுகள் ஒருங்கிணைந்து நீர் வளங்களைப் பாதுகாக்கவும், அனைவருக்கும் சமமான குடிநீர் கிடைத்தலை உறுதிசெய்யவும் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் நீருக்கான யுத்தம் நிகழக்கூடும்.
இன்றைய காலத்தில் எண்ணெய் வளத்தை மையமாகக் கொண்ட அரசியல் யுத்த மோதல்கள் நடப்பதைப் போல எதிர்காலத்தில் குடிநீர் வளங்களுக்காக நாடுகளுக்கிடையே மோதல்கள் உருவாகும் அபாயம் இருக்கிறது.

ஏற்கனவே சில நாடுகளில் ஆற்றுநீர் பகிர்வு தொடர்பான பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. நீர் பற்றாக்குறை அதிகரித்தால், அது சமூக அசமத்துவத்தையும் அரசியல் பதற்றத்தையும் உருவாக்கும். இந்தியாவில் காவிரி நீர்ப் பிரச்சினை இதற்கு தக்க சான்று.
எனவே, உலக நீர் தினம் என்பது சம்பிரதாயபூர்வமான நினைவுகொள்ளல் நாளாக்க் கடந்தும் செல்லும் ஒரு தினமல்ல, எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் பொறுப்புணர்வோடும் நமது வாழ்வு முழுவதையும் அமைக்கும் பாரிய பணி பற்றிய நாள்.
நாம் இன்று எடுக்கும் தீர்மானங்களே நாளைய நீர் நிலையை நிர்ணயிக்கும். இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
“நீரை பாதுகாப்பது பூமியின் அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதற்கு சமம்” என்ற உண்மையை உணர்ந்து, மனிதகுலம் விழிப்புணர்வோடும் பொறுப்போடும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 22 March, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.