ஈரானில் நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு தொடர்ந்தும் சிறை!
ஈரானில் பெண்களின் உரிமைக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் மூன்று தசாப்தங்களாகப் போராடி வரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற 53 வயதுடைய நர்கீஸ் முகமதிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மேலும் 7.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஏற்கனவே சிறையில் இருக்கும் நர்கீஸ் முகமதி மீது சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்ல தடை
அதன்படி, தேசிய பாதுகாப்புக்கு எதிராக சதி செய்தார் என்கிற குற்றச்சாட்டுக்கு 06 ஆண்டுகளும், அரசுக்கு எதிரான பிரச்சாரம் செய்தார் என்கிற குற்றச்சாட்டுக்கு ஒன்றரை ஆண்டுமாக 07 அரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த பின்னர், 02 ஆண்டுகள் உள்நாட்டு நாடுகடத்தல் (Internal Exile - குஸ்ஃப் நகரில் வசிக்க வேண்டும்) மற்றும் 02 ஆண்டுகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி, மஷாத் நகரில் மர்மமான முறையில் உயிரிழந்த சட்டதரணி கோஸ்ரோ அலிகோர்டியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நர்கீஸ் கலந்து கொண்ட போது ஆற்றிய உரை, "அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாகவும்", "அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பத் தூண்டியதாகவும்" கூறி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

சிறையில் தனக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நர்கீஸ் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அவரது சட்டதரணி முஸ்தபா நிலியுடன் தொலைபேசியில் பேசிய பின்னர் அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டதாக 'நர்கீஸ் அறக்கட்டளை' தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |