'IRIS Dena“ கப்பலில் இருந்தவர்களை மீட்ட இலங்கை : ஈரான் தூதுவர் வெளியிட்ட அறிவிப்பு
அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை எடுத்திருந்ததற்கு இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 2026 பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே பதற்ற நிலை தீவிரமடைந்துள்ளது.
இஸ்லாமியக் குடியரசின் தலைவர் படுகொலை
அந்தக் காலப்பகுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தியது. மினாப் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை மற்றும் இஸ்லாமியக் குடியரசின் தலைவரை அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்தமை உள்ளிட்ட சிவில் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் இதில் அடங்கும்.

பாடசாலைகள், வைத்தியசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர், இது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நடவடிக்கை எடுக்காமை கவலையளிக்கின்றது.
சர்வதேச சட்டங்களின்படி, ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 15.1 ஆவது பிரிவின் கீழ் ஈரான் தனது "தற்காப்பு உரிமையைப்" பயன்படுத்தியது. 'Milan 2026' கடற்படைப் பயிற்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 'IRIS Dena' என்ற ஈரானியக் கப்பல், இலங்கை கடற்பரப்புக்கு அருகில் வைத்துத் தாக்கப்பட்டது.
104 மாலுமிகள் உயிரிழப்பு
இதில் ஆயுதமற்ற 104 மாலுமிகள் உயிரிழந்ததுடன், போர்க்களத்திலிருந்து 1,100 கடல் மைல் தொலைவிலிருந்த இந்தக் கப்பலைத் தாக்கியதை அமெரிக்க ஜனாதிபதி ஒரு "பொழுதுபோக்கு" என வர்ணித்தமை மனிதாபிமானச் சட்டங்களை மீறும் செயல். ஈரான் போரை விரும்பவில்லை, ஆனால் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தீர்க்கமான பதிலடி கொடுக்கும்.

ஹோர்முஸ் நீரிணை ஈரானிய கடற்பரப்பிற்குள் ஒரு "போர் வலயமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது நீரிணை மூடப்பட்டதைக் குறிக்காது, மாறாக "எதிரி நாடுகளின் கப்பல்களுக்கான" அனுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதைக் குறிக்கின்றது” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |