காபூல் விமான நிலைய குண்டுவெடிப்புக்கு பின்னால் ISIS தீவிரவாதிகள்!! அமெரிக்க வீார்கள் உட்பட 73 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்தின் அபேய் நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற இரு வெடிப்புச்சம்பவங்களுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவத்தில் அமெரிக்க துருப்பினர் 13 பேர் உட்பட 73 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் 140 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் அமைந்துள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் நேற்று இரவு இரண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
முதலாவது வெடிப்பு சம்பவம் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள விடுதியொன்றுக்கு வெளியில் இடம்பெற்றிருந்த நிலையில், இரண்டாவது வெடிப்பு சம்பவம் விமான நிலையத்தின் அபேய் நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இது தற்கொலை குண்டு தாக்குதலாக இருக்கும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, காபூல் விமான நிலையத்தினை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானிய புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.