அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் திடீர் முட்டுக்கட்டை!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தயாராகி வரும் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Islamabad Memorandum) திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈரான் அரசு ஊடகங்களிடம் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் இந்த இஸ்லாமாபாத் ஒப்பந்தம், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிலையற்ற தன்மை
தற்போதைய நிலையில் அணுசக்தி விவகாரங்கள் குறித்து இதில் எந்த விவாதமும் நடத்தப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தம் கையெழுத்தாகும் துல்லியமான திகதிக்காகக் காத்திருக்க வேண்டும்.
நாளை (ஞாயிறு) இது கையெழுத்தாகாது என்றாலும் வரும் நாட்களில் இது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலும் நிராகரிக்கப்படவில்லை.

இருப்பினும் மறுதரப்பின் (அமெரிக்கா) நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்தச் செயல்முறை குறித்த எந்தவொரு அறிவிப்பிலும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம் எனப் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்த நிலையில், ஈரான் தரப்பிலிருந்து இந்த அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |