இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் : கத்தாரில் மீண்டும் பேச்சுவார்த்தை
காசா (Gaza) போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் (Israel) மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே கத்தாரில் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய படைகள் காசாவில் குண்டுவீச்சைத் தீவிரப்படுத்தி, பாரிய தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வரும் பரபரப்பான சூழ்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கத்தாரில் மீண்டும் தொடங்கியுள்ளன.
முன்னதாக, காசா பகுதியில் தனது இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆயத்தங்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக அறிவித்தது.
இஸ்ரேலிய இராணுவம்
அத்தோடு இஸ்ரேலிய இராணுவம், விரிவான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், பெருமளவிலான துருப்புக்களை அப்பகுதிக்கு அனுப்பி வருவதாகவும் தெரிவித்திருந்தது.
போர் நிறுத்தம் ஏற்படாத வரையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஹமாஸ் தொடக்கத்தில் மறுப்பு தெரிவித்ததாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) குறிப்பிட்டார்.
வான்வழித் தாக்குதல்கள்
இருப்பினும், இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் படைகளின் அணிதிரட்டல் காரணமாக ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் தற்போது ஒரு மேசையில் அமர்ந்து இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விவாதிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாவிட்டால், இராணுவ நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை தோஹாவில் போர் நிறுத்தத்திற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியதாக ஹமாஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
