நெதன்யாகுவுக்கு அதிர்ச்சியளித்த ட்ரம்பின் அறிவிப்பு! உடன் மேற்கொள்ளப்பட்ட அழைப்பு
ஈரானுடன் ஏற்படவிருக்கும் சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஆதரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவருடன் அவசரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் தனது உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது, ட்ரம்ப் வெளியிட்ட இந்த உடனடி ஒப்பந்த அறிவிப்பு நெதன்யாகுவை முற்றிலும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குறித்து இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ட்ரம்பின் உறுதிப்பாடு
அந்த அறிக்கையின்படி, ஈரானுடனான இறுதி ஒப்பந்தத்தின் மூலம் தெஹ்ரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அகற்றப்படும், அதன் அணுசக்தி உள்கட்டமைப்புகள் முற்றிலுமாகக் கலைக்கப்படும், அதன் ஏவுகணை உற்பத்தி கட்டுப்படுத்தப்படும் மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஈரானின் ஆதரவுப் படைகளுக்கான நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்ற ட்ரம்பின் உறுதிப்பாட்டிற்கு நெதன்யாகு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், கள நிலவரம் சற்று முரண்பாடானதாகவே காணப்படுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தைகளுக்கான காலக்கெடு
ட்ரம்ப் கடந்த சில வாரங்களாக ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கையாள்வது குறித்து மட்டுமே தனது பொதுக் கருத்துக்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மாறாக, இஸ்ரேல் எதிர்பார்ப்பது போல ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் அல்லது அதன் ஆதரவுப் படைகள் குறித்து அவர் எவ்விதக் குறிப்பையும் சமீபகாலமாக வெளிப்படுத்தவில்லை.
அத்துடன், இந்த இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளுக்கு முறையான காலக்கெடு எதையும் விதிக்கவும் ட்ரம்ப் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |