பாலஸ்தீன அமைச்சர் இஸ்ரேலிய காவல்துறையால் கைது !
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் சில்வான் பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து, ஜெருசலேம் விவகாரங்களுக்கான பாலஸ்தீன அமைச்சர் அஷ்ரஃப் அல்-அவாரை இஸ்ரேலிய காவல்துறை புதன்கிழமை கைது செய்ததாக அவரது அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, காரணம் ஏதுமின்றி அல்-அவாரை இஸ்ரேலிய காவல்துறை தடுத்து வைத்ததாக ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
கைதுக்கான காரணம்
கைதுக்கான காரணம் குறித்து இஸ்ரேலிய காவல்துறை உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்குள் அல்-அவார் நுழைவதற்கு ஆறு மாதங்களுக்குத் தடை விதித்து இஸ்ரேலிய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர், பின்னர் அந்தத் தடை நீடிக்கப்பட்டது.
ஜெருசலேம் விவகாரங்களுக்கான பாலஸ்தீன அமைச்சகம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அல்-ராம் நகரில் அமைந்துள்ளது, அதே நேரத்தில் பாலஸ்தீன அரசாங்கக் கூட்டங்கள் ரமல்லாவில் நடைபெறுகின்றன.
ஒக்டோபர் 7, 2023 முதல், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனர்களின் விளையாட்டு, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேலிய அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இடிக்கப்படும் பாலஸ்தீனர்களின் வீடுகள்
இஸ்ரேலிய அதிகாரிகள் குடியேற்ற நடவடிக்கைகளையும் பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிப்பதையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில், அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் குடியேறிகள் ஊடுருவுவதற்கு வழிவகை செய்வதுடன், வழிபாட்டாளர்களையும் மத போதகர்களையும் அவ்விடத்திற்குள் நுழையவும் தடை விதித்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் தங்களின் எதிர்கால நாட்டின் தலைநகரம் என்று பாலஸ்தீனியர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், இஸ்ரேல் அந்நகரம் முழுவதையும் தனது தலைநகரம் எனக் கோருகிறது. இந்தக் கோரிக்கையை சர்வதேச சமூகம் பரவலாக நிராகரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |