தென்கொரியாவை உலுக்கிய கோரம்..! பலி எண்ணிக்கை 146 ஆக உயர்வு - பலர் ஆபத்தான நிலையில்.. (காணொளி)
மூன்றாம் இணைப்பு
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 146 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 150 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு
கடந்த ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59இல் இருந்து 120 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 100 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரிய அதிபர் யூன் சுக் - யோல் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் கூட்ட நெரிசலில் சிக்கி 59 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சியோலில் இன்றிரவு ஹாலோவீன் (Halloween) கொண்டாட்டங்களுக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் சுமார் 150 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பு பணிகள் தீவிரம்
மேலும், நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியில் தென்கொரியாவின் பாதுகாப்பு தரப்பு மற்றும் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்றுக்குப் பின், முதல் முறையாக முகக் கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவீன் கூட்டம் இது என்பதால் இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், மக்கள் விரைவாக வீடு திரும்ப வேண்டும் என்ற அவசரகால செய்தியொன்று யோங்சான் மாவட்டத்தில் உள்ள அனைவரின் தொலைபேசிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.