தமிழரசுக் கட்சியின் இரட்டை நிலைப்பாடு : களமிறங்குகிறார் பிரபல சட்டத்தரணி
தமிழ் ஊடக நிறுவனங்கள் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தன்மீது அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான எதிர்மனுதாரர்களின் ஆட்சேபனைகள் எதிர்வரும் 27.03.2026 (வெள்ளிக்கிழமை) கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
தமிழ் ஊடகங்களில் வெளியான நேர்காணல்கள், அரசியல் விமர்சன நிகழ்ச்சிகள் கருத்துக்களை தடைசெய்யப்பட்ட கூற்றுக்கள் எனக்கூறி அவற்றினை தடை செய்யுமாறு கோரி நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரிவு 24இன் கீழ் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த மனுத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது.
முன்னிலையாகவுள்ள சட்டத்தரணி கலாநிதி. குருபரன்
கடந்த 13.03.2026 (வெள்ளிக்கிழமை) எதிர்மனுதாரர்களின் ஆட்சேபனைகளுக்கு திகதியிடப்பட்டிருந்த குறித்த வழக்கு எதிர்வரும் 27.03.2026 (வெள்ளிக்கிழமை) தவணையிடப்பட்டிருந்தது. எதிர்மனுதாரர்கான ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பாக சட்டத்தரணி கலாநிதி. கு.குருபரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகவுள்ளனர்.

நிகழ்நிலைப் காப்புச் சட்டம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி எதிரான நிலைப்பாட்டினை மேற்கொண்டிருந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 24 2024 அன்று நடைபெற்ற விவாதத்தின் போது தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக நிகழ்நிலைப் காப்புச் சட்டத்தினை எதிர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்நிலைக் காப்புச் சட்டம்
குறித்த விவாதத்தின் போது தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, 'நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது. இது தமிழ் மக்களை ஒடுக்கும் நோக்கம் நோக்கம் கொண்டது. போராட்டம், கடையடைப்பு, அரசாங்கத்திடம் நியாயம் கேட்பது, அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் கூட இனிவரும் காலங்களில் குற்றமாக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படலாம்.'

மேற்குறித்த வழக்கிற்கு மேலதிகமாக, சமூக வலைத்தளங்களில் தனக்கெதிராக அரசியல் விமர்சனங்களினை மேற்கொண்டார்கள் என்று 23 தனிநபர்களிற்கு எதிராகவும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் மற்றுமொரு வழக்கும் அந்த தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரால் தொடரப்பட்டுள்ளது. குறித்த தனிநபர்களில் பெருமளவாக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.
குறித்த வழக்கு மீதான ஆட்சேபனைகளிற்கு 25.03.2026 (புதன்கிழமை) அன்று திகதியிடப்பட்டிருந்த போதிலும் புதன்கிழமைகளில் பொதுவிடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் பிறிதொரு தினத்திற்கு திகதியிடப்படவுள்ளது.
பல தரப்பும் கண்டனம்
நிகழ்நிலைக் காப்புச் சட்டமானது, சனநாயக வெளிக்கும், கருத்துருமைக்கும் பாரிய அச்சுறுத்தல் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணிமனை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பன கடுமையாக விமர்சித்தும் தமது கண்டனங்களை பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்து.

தனிப்பட்ட நிலைகளிற்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டால் அவதூறுகள் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வதற்கு ஏதுவாக சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை ஊடகப்பரப்பில் பேசுபொருளாகியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும் கடுமையானமுறையில் எதிர்க்கப்பட்ட சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழரசுக் கட்சியின் நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பிலான இரட்டை நிலைப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |