முண்டியடித்துக்கொண்டு ஈ.பி.டி.பியிடம் ஆதரவு கோரும் தமிழ் தேசியக் கட்சிகள்
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சங்கு - சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் (EPDP) கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே டக்ளஸ் தேவானந்தா இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நண்பர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan) என்னை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தொடர்பாக கலந்துரையாடினார். அரசியல்வாதியாக இல்லாமல் நட்பு ரீதியாக அந்த சந்திப்பு நடைபெறும்.
ஆதரவு கோரியுள்ளன
உள்ளூராட்சி சபைகளை ஆளுவது தொடர்பாக அண்ணன் சி.வி.கே.சிவஞானமும் (C. V. K. Sivagnanam) குறுஞ்செய்தியை அனுப்பி சந்திப்பதற்கு கோரியிருந்தார். இருவரையும் சந்திக்க தீர்மானித்துள்ளேன்.
எங்களுடைய கட்சியினுடைய நிலைப்பாடு பக்கம் சாராது மக்கள் நலன் சார்ந்து இருக்கும். எந்த இடத்திலும் ஆட்சியை பொறுப்பெடுப்பதற்கோ ஆட்சியில் பங்கெடுப்பதற்கோ நாங்கள் தயாராக இல்லை. எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உள்ளோம்.
உத்தியோகபூர்வமாக எந்த கட்சிகளும் இதுவரை என்னோடு கதைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் எங்களுடைய கட்சி முக்கியஸ்தர்களிடம் தங்கள் ஆதரவை கோரியுள்ளனர்.
கடந்த கால கசப்புகளை கருத்திற்க்கொண்டு எதுவுமே உத்தியோகபூர்வமாக இருந்தாலே அது நல்லது என்பது என்னுடைய அனுபவம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
