இனவழிப்புக்கு எதிர்ப்பு : மானிப்பாய் பிரதேச சபை அமர்வில் தமிழரசு உறுப்பினர் வெளிநடப்பு!
மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது இன்றையதினம் (25) தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமான போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் லோகப்பிரகாசம் ரமணன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துவிட்டே அவர் இவ்வாறு வெளிநடப்பு செய்த போது சபையின் உப தவிசாளரும் வெளிநடப்பு செய்தார்.
சபை அமர்வுக்கு முன்னர் அவர் கருத்து தெரிவிக்கையில், “எமது இனமானது அளிக்கப்படுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜூலை கலம்பகம்.
செம்மணி புதைகுழி
இந்த ஜூலை கலம்பகத்தின்போது தான் தமிழர்கள் அவர்களது தாயகம் நோக்கி விரட்டியடிக்கப்பட்டார்கள். அதன் பின்னர் தான் எமது இளைஞர்கள் பலர் ஆயுதங்களை கையில் எடுத்தார்கள்.
செம்மணி புதைகுழியில் எமது பிஞ்சு குழந்தைகள் உட்பட இளைஞர்கள், யுவதிகள் என பலர் புதைக்கப்பட்டமைக்கு அடிப்படை காரணம் ஜூலை கலம்பகமே. அரசு இயந்திரம் சரியாக செயல்பட மறுக்கிறது. எமது இளைஞர்கள் யுவதிகளுக்கு என்ன நடந்தது?
1983 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூலை கலம்பகத்திற்கு தீர்வு இதுவரை வழங்கப்பட்டதா? இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் இந்த சபையை விட்டு ஐந்து நிமிடங்கள் வெளிநடப்பு செய்கின்றேன்.
இன அழிப்பு
இந்த இன அழிப்பு நடைபெற்றது உண்மையே, இன்றும் அதற்கு தீர்வு வழங்கப்படவில்லை என கருதுபவர்கள் என்னுடன் இணைந்து ஐந்து நிமிடங்கள் வெளி நடப்பு செய்யுங்கள்“ என கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார். அவருடன் இணைந்து உப தவிசாளரும் வெளிநடப்பு செய்தார்.
எனினும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் உறுப்பினர்களான் இலங்கை தமிழரசு கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் எவரும் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
