மன்னாரில் சங்குடன் இணைய தயார் : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயற்படுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தயாராக இருக்கும் நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுடன் இணைந்து சபை அமைப்பதற்கு முன்வருவார்கள் என நம்புவதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) தெரிவித்தார்.
மன்னாரில் (Mannar) உள்ள அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்து தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான சபைகளை அமைக்கும் நடவடிக்கைகள் உள்ளுராட்சி ஆணையாளரினால் இடம்பெற்று வருகின்றது.
தவிசாளர்களை தெரிவு செய்தல்
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் 5 சபைகளுக்குமான தவிசாளர்களை தெரிவு செய்கின்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
அதனடிப்படையில் மக்களுக்கும் போட்டியிட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கையாகவும், தெளிவுபடுத்தலையும் வழங்கும் வகையில் இந்த ஊடக சந்திப்பை மன்னார் மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபை தவிர மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு பிரதேச சபைகள் உள்ளடங்கலாக 4 சபைகளில் தேர்தலில் போட்டியிட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையானது, தமிழ் கட்சிகள் அதிக ஆசனங்களை கைப்பற்ற வேண்டும். அதன் மூலம் சபைகளை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்பட்டு இருந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தெரிவின் போது கூட மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக வீட்டுச் சின்னத்தில் தமிழரசுக் கட்சியும் சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் போட்டியிட்டது.
தேர்தலுக்கு முன்னர் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது. ஒவ்வொரு சபைகளிலும் அதிக ஆசனங்கள் எடுக்கின்ற கட்சிக்கு மற்றைய கட்சி ஆதரவு வழங்குவதாக இணக்கப்பாடு ஏற்பட்டது.
மன்னார் நகர சபை
அதனடிப்படையில் நாங்கள் மன்னார் பிரதேச சபையில் தலைமன்னார் வட்டாரத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக தமிழரசுக் கட்சி வேட்பாளரை நியமிக்கவில்லை.
அதேபோல் மாந்தை மேற்கு பிரதேச சபையில் விடத்தல் தீவு இரட்டை தொகுதி வட்டாரத்தில் தமிழரசுக் கட்சி வேட்பாளரை நியமித்தால் டி.ரி.என்.ஏ. கட்சியினர் வெற்றி பெற முடியாது என்ற காரணத்தால் அங்கும் நாங்கள் வேட்பாளர்களை போடவில்லை.
அதனடிப்படையில் மன்னார் நகர சபை, மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைகள் ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கைத் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களை பெற்றுள்ளது.
அதனடிப்படையில் தேர்தல் முடிவு வந்த பிற்பாடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் தமிழரசுக்கட்சி தவிசாளரை நியமிக்குமாறும், தாங்கள் உப தவிசாளரை நியமிப்பதாகவும் கூறியிருந்தனர்.
பின்னர் அவர்கள் நிபந்தனை விதித்தார்கள். மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளரை தமது கட்சிக்கு வழங்கும் பட்சத்தில் தாங்கள் ஏனைய சபைகளில் ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்கள்.
தொடர்ச்சியாக 3 தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்று மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் தவிசாளர் தெரிவில் முதல் 2 வருடம் தமிழரசுக் கட்சிக்கும் அடுத்த 2 வருடம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வழங்குவது என இரு தரப்பினருக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
நானாட்டான் பிரதேச சபை
மாந்தை மேற்கில் தமிழரசுக் கட்சிக்கு அதிக ஆசனங்கள் இருக்கின்ற காரணத்தினால் எங்களுக்கு முதல் 2 வருடங்களை வழங்க கோரிக்கை விடுத்தோம். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யோசித்து விட்டு கூறுவதாக சொன்னார்கள். ஆனால் அவர்கள் இன்று வரை எந்த முடிவையும் எமக்கு அறிவிக்கவில்லை.
குறித்த மூன்று சபைகளுக்குமான தவிசாளரை நாங்கள் அறிவிக்க இருக்கின்றோம். நானாட்டான் பிரதேச சபை குறித்து கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டின் பின்னர் முடிவுகள் எடுக்கப்படும்.
எனவே மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுக்கும் மக்களுக்கும் ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும் கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாகவும், இந்த கோரிக்கையை விடுக்கின்றோம்.
அதிக ஆசனம் பெற்ற சபைகளில் தமிழ் கட்சிகள் முன் வந்து நிபந்தனையற்ற வகையில் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும். மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தொடர்பில் 2 வருடங்கள் தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய 2 வருடம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வழங்க இலங்கை தமிழரசு கட்சி தயாராக இருக்கிறது.
எனவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தனிப்பட்ட கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயற்படுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தயாராக இருக்கிறது.
எனவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் எங்களுடன் இணைந்து சபை அமைக்கும் விடயத்தில் முன்வருவார்கள் என நம்புகின்றோம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
