தமிழின அழிப்பை இனப்படுகொலையாக அங்கீகரிக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து
இத்தாலியின் முக்கியமான நகராட்சிகளில் ஒன்றானாக பலெர்மோ மாநகராட்சியும், இத்தாலி தமிழர் ஒன்றியமும் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளன.
சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தமாத நடுப்பகுதியில் இத்தாலியப் பணயத்தை மேற்கொண்ட நிலையில் இத்தாலி வாழ் தமிழ் மக்களின் தரப்பில் எடுக்கபட்ட முக்கியமான நகர்வாக இந்த உடன்படிக்கை நோக்கப்படுகிறது.
சிறிலங்காவில் நடந்த தமிழின அழிப்பை இனப்படுகொலையாக ஏற்றுக்கொண்டு எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் ஒரு உடன்படிக்கையாக இது உருவாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை சிங்கள மக்கள் அதிகம்வாழும் இத்தாலியில் அதன் முக்கியமான நகராட்சிகளில் ஒன்றாக உள்ள பலெர்மோ மாநகராட்சியுடன் தமிழ் அமைப்புகள் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்துள்ளன.
பலெர்மோ மாநகராட்சி மன்றத்தில் மாநகர முதல்வர் லியோ லூகா ஒர்லன்டோ Leoluca Orlando தலைமையில், இடம்பெற்ற இந்த நிகழ்வில் குடியுரிமைக்கான மதிப்பீட்டாளர் மரியா சின்சியா மன்தென்னா Maria Cinzia Mantegna, ஆகியோருடன் தமிழர் தரப்பில் இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழர் ஒன்றியம், ஈழத்தமிழர் மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் இத்தாலி வாழ் தமிழ் மக்களுடன் பலெர்மோ மாநகராட்சியும் இணைந்துள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் பலெர்மோ மாநகராட்சி இத்தாலி தமிழர் ஒன்றியத்துடன் சில விடயங்களை முன்னெடுக்கும் வகையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
குறிப்பாக சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடாத்திவரும் படுகொலைகளை இனப்படுகொலைக்குள் உறுதிப்படுத்துவது.
பலெர்மோவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 11 ஆம் திகதி முதல் 18 ஆந்திகதி வரை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ஒன்றை பிரகடனப்படுத்துவது.
பலெர்மோ நகரத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் இடையே இறுக்கமான தொடர்புகளை பேணுவது ஈழத்தமிழர் வரலாறு, கலாசாரம் மற்றும் அடையாளத்தை பலெர்மோ குடிமக்கள் அறிவதற்காக முயற்சிகளை ஊக்குவிப்பது உட்பட முக்கிய விடயங்கள் உள்ளடக்கபட்டிருந்தன.
சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச குழுவின் இத்தாலியப்பயணம் முடிவடைந்த ஒரு வாரகாலத்தில் பலெர்மோ மாநகராட்சியில் இருந்து வெளிப்பட்ட இந்த நகர்வு புலம்பெயர் ஈழத்தமிழர்களின் தளத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.