பணம், நகைக்காக தமிழர் தாயகத்தில் நடந்த மற்றுமொரு கொலைச் சம்பவம்..!
முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் வசித்து வரும் 69 வயதுடைய அப்பாதுரை வேலாயுதம் எனப்படும் மரணக்கிரியைகள், அந்தியோட்டி கிரியைகள் செய்து வரும் ஐயர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்றையதினம் (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த ஐயர் கொலை செய்யப்பட்டு அவரிடம் இருந்த நகைகள், பணம் என்பவை கொள்ளையிடப்பட்டுள்ளது.
சம்பவம்
குறித்த வீட்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்திருந்த மனைவின் உறவினர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் உறங்கிக் கொண்டிருந்த வேளை, வீட்டின் ஜன்னலை பிரித்து, யன்னல் கம்பியினைப் உடைத்து கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
பின்னர் உறங்கிக் கொண்டிருந்த வயதான உறவினர் மற்றும் ஐயரின் மனைவி ஆகியோரின் கை கால்கள்களை கட்டி, வாயையும் கட்டிய பின் குறித்த ஐயர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வீட்டிற்குள் நுளைந்த இரு சந்தேக நபர்களும் முகத்திற்கு துண்டுகளை காட்டியபடி கையில் வாள், தடிகள் கொண்டு வந்துள்ளதாக பாதிக்கப்பட்ட வயோதிபர் தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்கள் ஐயரின் 15 பவுண் நகைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் (அண்ணளவாக) என்பவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
உறவினர் வாக்குமூலம்
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட மனைவி மற்றும் வயதான உறவினர் ஆகியோர் அதிகாலை கை கால் கட்டுகளை அவிழ்த்து வெளியில் வந்து பார்த்தபோது ஐயர் நிலத்தில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அச்சமடைந்த இருவரும் வீட்டிற்கு முன்னாள் உள்ள கடை ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.
கடைக்காரர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், தடையவியல் அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் துப்பறியப்பட்டுள்ளன.
நீதிபதியின் பணிப்புரை
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்டுள்ளார்.
உடலினை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும், இது தொடர்பிலான விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினரை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளார்.
