செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச தலையீடு கோரிய போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தலையீடு மற்றும் கண்காணிப்பினை வலியுறுத்தி நாளை(05) காலை 10 மணியளவில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்திற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தனது ஆதரவினை வழங்குவதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரிமச்சந்திரன் தெரிவித்தார்.
அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரிலும், முல்லைத்தீவிலும் புதைகுழிகள்
ஏற்கனவே மன்னாரிலும், முல்லைத்தீவிலும் புதைகுழிகள் கிளறப்பட்டன தற்போது செம்மணியில் அந்த விடயம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த புதைகுழிகள் அகழப்பட்ட பொழுதிலும் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பது நிதர்சனமான உண்மையாக காணப்படுகின்றது. ஆகவே இது சர்வதேச தலையீட்டுடன் செய்யபடுகின்ற பொழுது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான வழிமுறைகள் இருக்கின்றது. அதனை இலங்கை அரசாங்கம் செய்யுமா என்பதுதான் இருக்கக்கூடிய மிகப்பெரிய கேள்வியாகவும் இந்த நாட்டில் பாரிய படுகொலைகள் நடந்தது என்பதும் கொலைகள் நடைபெற்றது என்பதும் உண்மை .
சர்வதேச தலையீட்டுடன் விசாரணை
சர்வதேச தலையீட்டுடன் இந்த அகழ்வுகள் அல்லது விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். கண்காணிப்புகள் இருக்க வேண்டும் அது தொடர்ச்சியாக ஒரு முடிவினை எட்ட வேண்டும். பிற்பாடு அதனை கிடப்பில் போடுவது என்பது மகா தவறு அவை நிறுத்தப்பட வேண்டும் என்பதனை நான் வலியுறுத்துகின்றேன் என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
