யாழ் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ்!
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இருவருக்குமான நியமன கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்த்தன இன்று(23) வழங்கி வைத்துள்ளார்.
கிளிநொச்சி அபிவிருத்தி குழு பதில் தலைவர்
கடந்த காலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டிருந்தார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களையும் கொள்கையையும் புரிந்து கொண்டு, அதனை வலுப்படுத்தும் வகையில் செயற்படக் கூடிய பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படும் வரையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவிற்கான பதில் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயல்படுவார்.
இதனை, அதிபர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அவரிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது.
