சுதந்திர தின எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்க அழைப்பு - சிறீதரன் எம்.பி!
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 04 ம் திகதியை தமிழர்களுக்கான கரிநாளாகப் பிரகடனம் செய்து "தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை" என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தக்கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் எழுச்சிப்பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 10.00 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்படும் "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய" எழுச்சிப்பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறீதரன் - ஊடக அறிக்கை
எமது இனத்தின் கனவுகளைச் சுமந்த இலட்சியப் பயணத்தின் நீட்சிக்கான படிமமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து முன்னெடுத்திருக்கும் எழுச்சிப் பேரணியானது நாளை காலை 10.00 மணிக்கு யாழ். பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பித்து எதிர்வரும் 2023.02.07 ஆம் திகதி மட்டுநகரைச் சென்றடையவுள்ளது.
எமது மாணவர்களின் இப்பெரும் முன்னெடுப்புக்கு சமூக, மத மற்றும் கட்சி பேதங்களற்று பேராதரவு வழங்கவேண்டிய காலக்கடமை நம் எல்லோருக்கும் உள்ளதை உணர்ந்து, தமிழ்த்தேசியப் பற்றுறுதிமிக்க எமது மக்கள் அனைவரையும் இவ் உணர்வெழுச்சிப் பேரணியில் இணைந்துகொள்ளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்.
அதேவேளை, நாளை 2023.02.04 ஆம் திகதி, சனிக்கிழமை பிற்பகலில், பேரணி கிளிநொச்சியை வந்தடையும் நேரத்தில், கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியும் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டும் ஆதரவளிக்கவும்.
அதேவேளை, எமது இனத்தின் இருப்பை நிலைநிறுத்துவது குறித்த சிந்தனையும், சிரத்தையும் மிக்க கிளிநொச்சி வாழ் உறவுகள் அனைவரும் நாளை பி.ப.3.00 மணிக்கு கரடிப்போக்குச் சந்தியில் ஆரம்பித்து இரணைமடுச் சந்திவரை நீளும் எழுச்சிப்பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையோடு அழைத்து நிற்கிறேன்.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
