யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி - சிவலிங்கம் இடமாற்றம் தொடர்பில் விளக்கம்
தமிழ்த்தேசிய எழுச்சியின் அடையாளமாக விளங்கும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சமகாலத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய விடயங்களால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் எமது தளத்தில் குறித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ''சொன்னாலும் குற்றம்'' பகுதியில் வெளியிடப்பட்ட செய்தியின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் இடமாற்றப்பட்டமை தொடர்பில் பாடசாலை வட்டாரத்தினரால் விளக்கமளிக்கும் வகையில் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2018 ஆம் ஆண்டில், அப்போதைய அதிபரின் அனுசரணையுடன் ஒரு சில பழைய மாணவர்களால் தன்னிச்சையாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த விடயம் அறிந்த உடனேயே, யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கம் உட்பட பல தரப்பினரும், பாடசாலைக்கு சிவலிங்கம் தேவையா? தேவை என்றால், ஏன் இவ்வளவு அவசரமாக? அதை வைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடமும் முறையும் பொருத்தமானதா? என்ற கேள்விகளை எழுப்பி, நேரடியாகவும் கடிதங்கள் மூலமும் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
அந்த நேரத்தில் அப்போதைய அதிபர், "இது கோவிலாக மாற்றும் முயற்சி அல்ல. மாணவர்கள் தியானம் செய்யவும், தங்களின் விருப்பப்படி மாணவர்கள் தமிழில் பூசை செய்து சிவனை வழிபடவும் ஒரு சின்ன அடையாளமாக மட்டுமே இது வைக்கப்படுகிறது” என்று உறுதிமொழி வழங்கியிருந்தார்.
குறித்த சிவலிங்கம் பாடசாலை அதிபர் அலுவலகத்தின் வாசலில் வைக்கப்பட்டிருந்ததனால், மாணவர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அலுவலகத்திற்கு வருகை தரும் பெற்றோர்கள் மற்றும் விருந்தினர்கள் என பலருக்கும் அது நடைமுறை இடையூறாக மாறியது.
அத்துடன் எமது புராதன பிரார்த்தனை மண்டபத்தினை மறைத்து பாரம்பரிய மேடையின் மேல் இச்சிவலிங்கம் வைக்கப்பட்டதும் பலரால் எதிர்க்கப்பட்டது.
இந்த காரணத்தினால், யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர், “சிவலிங்கம் ஒரு பொருத்தமான, மாணவர்களுக்கும் பாடசாலை ஒழுங்குக்கும் ஏற்ற இடத்தில் வைக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்தனர்.
ஆனாலும் முன்னைய அதிபரால் இக்கோரிக்கை எவையும் கருத்திற்கொள்ளப்படவில்லை அல்லது அவ்வாறு சிவலிங்கம் வைத்த குழுவால் நிர்பந்திக்கப்பட்டார்.
இந்தக் காலகட்டத்திலேயே, அப்போதைய அதிபர் கையூட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய அதிபர் பதவி ஏற்றார். புதிய அதிபர் பொறுப்பேற்ற நேரத்தில், பாடசாலை பல நிர்வாக சவால்களில் சிக்கியிருந்தது.
கொரோனா பெருந்தொற்று நிலவியது எனவே, சிவலிங்க இடமாற்றம் குறித்து உடனடியாக தீர்மானிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. அதன் காரணமாக, அதிபர் அலுவலகமும், கல்விசாரா ஊழியர்களின் அலுவலகமும் இடம் மாற்றப்பட்டு, ஒரு தற்காலிக, நடைமுறை தீர்வு வழங்கப்பட்டது.
அத்துடன் பழைய அதிபர் காலதில் ஏற்படுத்தப்பட்டிருந்த பல நடைமுறை மற்றும் நிர்வாகச் சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவைகளுக்கும் அதிபர் முன்னுரிமை கொடுக்க வேண்டியிருந்தது.
பராமரிப்பு பற்றிய அலட்சியம் கொரோனா காலத்தில், மாணவர்களால் நடைபெற்று வந்த பூசைகள் நிறுத்தப்பட்டன சிவலிங்கத்தின் பராமரிப்பு கேள்விக்குறியாகியது .
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய முன்வந்தவர்கள், தங்கள் நிகழ்ச்சி நிரல் முடிந்த பின், அதன் தொடர்ச்சியான பராமரிப்பில் எந்த அக்கறையும் காட்டவில்லை. இதன் பின்னர், பாடசாலையில் ஏற்கனவே உள்ள வைரவர் கோவில் அர்ச்சகர் மூலம், சிவலிங்கத்திற்கான அர்ச்சனை மற்றும் பராமரிப்பு ஒழுங்குகளை அதிபரே பொறுப்பேற்று மேற்கொண்டார்.
பாடசாலையின் மீள் எழுச்சி இந்தச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், புதிய அதிபர் தலைமையில், கல்வி விளையாட்டு இணைப்பாடவிதான செயல்பாடுகள் என அனைத்து துறைகளிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது.
ஒரு காலத்தில் வீழ்ச்சி நிலையில் இருந்த இந்தக் கல்லூரி, இன்று இலங்கை முழுவதற்கும் முன்மாதிரியாக மாறியுள்ளமை, முழு யாழ் சமூகத்திற்கும் பெருமை தரும் விடயமாகும்.
இந்த நிலையில், பாடசாலையில் உள்ள வைரவர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய காலம் வந்தது. அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமான வேளையில், சிவலிங்கம் இடமாற்ற கோரிக்கை மீண்டும், பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, "தேவை கருதி இடமாற்றம்” என்ற அடிப்படையில், அதிபர் ஒரு பொது அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை இந்துக் கல்லூரி சமூகம் ஏற்றுக்கொண்டது.
2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டத்திலும், இந்த விடயம் தெளிவாக விளக்கப்பட்டது. அந்த விளக்கம், பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வைரவர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒற்றுமையாகச் சேர்ந்து செய்வதற்கும் முழுமையான இணக்கம் எட்டப்பட்டது.
இந்த ஒற்றுமையான முடிவுகளின் அடிப்படையில், கும்பாபிஷேகப் பணிகள் சிவலிங்கம் இடமாற்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வேளையில், மூன்று தனிநபர்கள், "சிவலிங்கம் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியே கொண்டு செல்லப்படுகிறது” என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து, பாடசாலையையும் அதிபரையும் குறிவைத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இது முழுக்க முழுக்க, வீண்பழி சமூக குழப்பம் நிர்வாகத்தை அவதூறு செய்யும் முயற்சி என்பதே தெளிவாகிறது.
இப்போது, “சிவனுக்கு தனி கோவில், ஆகம விதிப்படி அமைக்க வேண்டும்” என்ற புதிய அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தமிழில் மாணவர்கள் பூசை செய்யவே சிவலிங்கம் வைக்கின்றோம் என்று அன்று சொன்னவர்களே இன்று ஆகம முறைப்படி கோவில் அமைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர்.
இதனை ஏற்றுக்கொண்டால், மாணவர்கள் தாமாக பூசை செய்யும் உரிமை பறிபோகும், அது ஒரு முழுமையான தனிக் கோவிலாக மாறும், பாடசாலை நிர்வாகத்திற்கு இரண்டு கோவில்களை பராமரிக்கும் பாரிய சுமை ஏற்படும்.
மேலும், ஏற்கனவே வைரவர் கோவில், சரஸ்வதி சிலை, பழைய பிரார்த்தனை மண்டபம், தற்போது சிவலிங்கம் என பல ஆன்மீக இடங்கள் உள்ள நிலையில், மேலும் ஒரு தனிக் கோவில் கட்ட வேண்டும் என்பது நடைமுறையிலும், கல்விசாரா நோக்கிலும் அபத்தமானது.
அத்துடன் ஏற்கனவே இட நெருக்கடியில் உள்ள எமது பாடசாலையில் ஆகம முறைப்படி இன்னும் ஒரு கோவில் அமைப்பது என்பது மாணவர் நடமாட உள்ள சிறு இடத்தையும் இல்லாமலாக்கும் ஒரு செயலாகும். இது சாத்தியமில்லாத ஒன்றாகும்.” என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |






இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்